உலக அளவில் ரஷ்ய நாட்டின் தலையீட்டாலும் பிரிக்ஸ் நாடுகளாலும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 ஆயிரமாகக் குறையும் என்று வெளியான செய்தி உண்மையா? உண்மையிலேயே தங்கம், வெள்ளி விலை குறையுமா? 

Continues below advertisement

இதுகுறித்து ஏபிபி நாடு-க்கு தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்தி லால் சலானி பேட்டி அளித்துள்ளார்.

சர்வதேச அளவிலான போர்ப் பதற்றம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அதிகப்படியான வரி விதிப்பு, பொருளாதார நிச்சயமற்ற நிலை, ஃபெடரல் ரிசர்வ் வங்கி குறைத்திருக்கும் வட்டி விகிதம், உலக அளவிலான சந்தையில் தங்கத்திற்கு ஏற்பட்டிருக்கும் தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறிக்கொண்டே செல்கிறது.

Continues below advertisement

இந்த நிலையில் அமெரிக்கா- ரஷ்யா இடையில் வணிக ஒப்பந்தம் முழுமையாக ஏற்படும் என்றும் இதனால் ரஷ்யா டாலர் பயன்பாட்டை மீண்டும் முழு வீச்சில் தொடங்கும் எனவும் சர்வதேச பொருளாதார ஆய்வு நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

நடந்தது என்ன?

கடந்த 2025-ம் ஆண்டில் முதலீட்டாளர்களுக்கு அமோக லாபத்தை வாரி வழங்கிய தங்கம், 2026-ம் ஆண்டின் தொடக்கத்திலும் தனது ஏற்றத்தைத் தொடர்ந்தது. ஜனவரி மாதத்தில் 10 கிராம் தங்கம் ரூ.1,80,779 என்ற வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டது.

ஆனால், இந்த விலை அதிகரிப்பு தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. கடந்த வாரத்தில் தங்கம் விலை அதன் உச்சத்திலிருந்து சுமார் 13.5 சதவீதம் சரிந்தது. அதாவது 10 கிராமுக்கு சுமார் ரூ.24,500 குறைந்து, ரூ.1,56,200-க்கு வர்த்தகமானது.

என்ன காரணம்?

ரஷ்யா மீண்டும் அமெரிக்காவுடன் பொருளாதாரக் கூட்டாண்மையை ஏற்படுத்தவும், அதற்கான வர்த்தகப் பரிவர்த்தனைகளை அமெரிக்க டாலரிலேயே மேற்கொள்ளவும் பரிசீலித்து வருகிறது. உக்ரைன் - ரஷ்யா போர் முடிவுக்கு வரும் சூழல் தென்படுவதாகவும், அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், டாலரில் மட்டுமே வர்த்தகம் செய்ய வலியுறுத்துவதாகவும் கூறப்படுகிறது.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பு, அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தைக் குறைக்கத் தங்கத்தைச் சேமித்து வருகின்றன. பிரிக்ஸ் மற்றும் அதன் நட்பு நாடுகள் உலகின் 50 சதவீத தங்க உற்பத்தியைக் கையில் வைத்துள்ளன. இந்நிலையில், ரஷ்யா மீண்டும் டாலர் வர்த்தகத்திற்குத் திரும்பினால், தங்கத்தின் தேவை குறையும்.

விலை குறைய வாய்ப்பு?

டிரம்ப் விதிக்கும் வரிகளைச் சமாளிக்க மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கின. தற்போது ரஷ்யா டாலருக்குத் திரும்பினால், தங்கத்தின் மீதான தேவை குறைந்து விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இது உலக அரங்கில் பேசுபொருளாகி வரும் சூழலில், தங்கத்தின் விலை குறைய வாய்ப்பில்லை என்று தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்தி லால் சலானி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஏபிபி நாடு-க்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ’’தங்கத்தின் விலை என்பது ரஷ்யா மட்டுமே முடிவு செய்யும் விஷயமில்லை. அதைத்தாண்டி ஏராளமான காரணிகள் இருக்கின்றன. ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவுக்கு எதிராக இருக்கின்றன; ரஷ்யாவுக்கு எதிராகவும் உக்ரைனுக்கு ஆதரவாகவும் இருக்கின்றன.

100 சதவீதம் வாய்ப்பே இல்லை

அமெரிக்காவும் ரஷ்யாவும் சமாதானம் ஆகிறார்கள் என்றால், அதை சீனா விரும்பாது. சீனாவின் கரன்சியை நிலைப்படுத்தவே அந்த நாட்டினர் விரும்புவர் என்பதால் தங்கத்தின் விலை குறையாது. விலையில் சற்றே ஏற்ற, இறக்கம் இருக்கலாம். ஆனால் தங்கத்தின் விலை பவுனுக்கு 80 ஆயிரம் ரூபாய் வருவதற்கெல்லாம் 100 சதவீதம் வாய்ப்பே இல்லை.

பிரிக்ஸ் நாடுகள் தங்களின் கருவூலங்களை நிரப்பிக் கொண்டே இருக்கின்றன. சீனாவும் தங்க பத்திரங்களை மாற்றிக்கொண்டே இருக்கிறது. இதனால் தங்கத்தின் விலையில் இப்போதைய நிலையில் சில மாற்றங்கள் இருக்கலாம். ஆனால் 1 லட்சம் ரூபாய்க்குக் கீழே வர வாய்ப்பில்லை’’ என்று தெரிவித்தார்.

வெள்ளிக்கு எப்படி?

வெள்ளி விலை குறித்துக் கேட்டபோது, ’’வெள்ளி விலையும் நிச்சயமாய்க் குறையாது. 1 கிலோ தங்கத்தின் விலை ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.2.6 லட்சமாகக் குறைந்துவிட்டது. இதற்கு மேலே குறைய வாய்ப்பில்லை என்றே தெரிகிறது’’ என ஜெயந்தி லால் சலானி தெரிவித்துள்ளார்.