முழக்கமிட்ட முதலமைச்சர்; நல்லகண்ணு உடலுக்கு 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை; உடல் தானம்
மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு உடலுக்கு 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டு, உடல், அவரது கடைசி விருப்பப்படி அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.

மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்திய பின், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அவரது உடல், அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.
நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை
சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தகைசால் தமிழர் நல்லகண்ணு, தனது 101-வது வயதில் நேற்று காலமானார். பின்னர் அவரது உடல், மருத்துவமனையிலிருந்து தொண்டர்கள் புடைசூழ ஆம்புலன்ஸ் மூலம் சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு இந்திய கம்யூனிஸ்ட் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக நல்லகண்ணுவின் உடல் வைக்கப்பட்டது. நேற்று முதல் அரசியல் கட்சியினர், திரைப்பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வந்தனர். நேற்று மாலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், இன்று காலை ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் அஞ்சலி செலுத்திய நிலையில், பிற்பகலில், முதலமைச்சர், மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.
தகைசால் தமிழர் நல்லகண்ணு உடல் அருகே நின்று, தகைசால் தமிழருக்கு வீர வணக்கம், செவ்வணக்கம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முழக்கமிட்டார். அதைத் தொடர்ந்து, 72 குண்டுகள் முழங்க நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
அரசு மருத்துவமனைக்கு உடல் தானம்
அதைத் தொடர்ந்து, தியாகராய நகர் பாலன் இல்லத்திலிருந்து நல்லகண்ணு உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அதில், தொண்டர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு வீரவணக்கம் செலுத்தி பிரியா விடை கொடுத்தனர். பின்னர், நல்லகண்ணுவின் உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு, ஆராய்ச்சிக்காக தானமாக வழங்கப்பட்டது.
தனது இறப்பிற்குப் பின், உடலலை மருத்துவமனைக்கு தானமாக வழங்க வேண்டும் என்று நல்லகண்ணு விருப்பம் தெரிவித்திருந்தார். அதனாலேயே, அவரது கடைசி விருப்பப்படி, அவரது உடல் அரசு மருத்துவமனையிடம் ஒப்படைக்கப்பட்டது.























