முகூர்த்த நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் இன்று கூடுதலாக 800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பேருந்து சேவை:


தமிழ்நாடு அரசின் மாநில பேருந்து போக்குவரத்து சேவை என்பது பொதுமக்களின் தினசரி வாழ்வில் தவிர்க்க முடியாததாக உள்ளது. வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன், அவ்வப்போது பண்டிகை காலம், சிறப்பு விடுப்புகள் போன்ற காலங்களில் பொதுமக்களின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுm. குறிப்பாக பொங்கல், தீபாவளி, கோடை விடுமுறை, ரம்ஜான் மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற முக்கிய விழாக்களின் போது, பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு ஏதுவாக அரசு தரப்பில் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அந்த வகையில் தற்போது வார இறுதி மற்றும் முகூர்த்த நாட்கள் ஆகியவை ஒன்று சேர்ந்து வருவதை கருத்தில் கொண்டு, இந்த வாரத்தில் மாநிலத்தில் பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து 800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


800 சிறப்பு பேருந்துகள்;


இதுதொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " 8/07/2023 (இரண்டாம் சனிக்கிழமை) மற்றும் 9/07/2023 (ஞாயிறு) ஆகிய விடுமுறை மற்றும்  முகூர்த்த நாட்களை முன்னிட்டு வெள்ளியன்று  சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளையும் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.


சென்னையிலிருந்து தமிழ்நாட்டின் முக்கிய இடங்களுக்கு இன்று தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதோடு கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூரிலிருந்து பிற இடங்களுக்குமாக  மொத்தம்  400 சிறப்பு பேருந்துகள்  இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 800 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். 


மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட  திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகள் மேற்கூறிய வசதியினைப் பயன்படுத்தி தங்களது பயணத்தினை அமைத்துக் கொள்ளுங்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும், இந்த வார இறுதியில் பயணம் மேற்கொள்வதற்காக இதுவரை 23,626 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணித்திட அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன்மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் எனவும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.