கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நாளை மறுநாள் முதல் தமிழ்நாட்டில் மீண்டும் இயங்க உள்ளது. இந்த நிலையில், மாணவர்களின் நலன் கருதி நாளை மறுநாள் முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் என்று போக்குவரத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மாணவர்கள் தங்களது அடையாள அட்டையை காண்பித்து பயணிக்கலாம் என்று உத்தரவிட்டுள்ளார்.


இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில்," 


கோவிட்-19 கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக இதுநாள் வரை பள்ளி கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில், தமிழக அரசு அறிவித்த கொரோனா ஊரடங்கு தளர்வுகள் மற்றும் அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளின் அடிப்பைடையில், பள்ளி மற்றும் அரசு கல்லூரிகள் வரும் 01.09.2021 முதல் திறக்கப்பட உள்ளது.


எனவே. 2021-22 கல்வியாண்டில். மாணவர்/மாணவியர்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண அட்டை அனைத்து போக்குவரத்துக் கழகங்களால் வழங்கப்படும் வரை அரசு பேருந்துகளில் பள்ளி மாணவ மாணவியர்கள் சீருடை அல்லது புகைப்படத்துடன் கூடிய பள்ளிகளில் வழங்கப்பட்ட அடையாள அட்டையை. நடத்துநர்களிடம் காண்பித்து தத்தம் இருப்பிடத்திலிருந்து பயிலும் பள்ளி வரை சென்றுவர கட்டணமின்றி பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.


அதே போன்று, அரசு கல்லூரி, அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (Government ITI, Government College, Government Polytechnics) பயிலும் மாணவ / மாணவியர்கள் தங்களது கல்வி நிறுவனத்தால் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை, நடத்துநர்களிடம் காண்பித்து தத்தம் இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிறுவனம் வரை சென்றுவர கட்டணமின்றி பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டது. 


 






 முன்னதாக, பள்ளிகள் திறப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. அதில்,  9 முதல் 12ம் வகுப்புகள் வாரத்தில் 6 நாள்களும் செயல்படும். வகுப்புகளில் தலா 20 மாணவர்கள் மட்டுமே அமர அனுமதிக்கப்படுவர்.    பள்ளிகளில் ஒவ்வொரு இருக்கைக்கும் நடுவே குறைந்தது 6 அடி இடைவெளி இருக்க வேண்டும். கட்டுப்பாட்டு பகுதிக்குள் இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளிகளுக்கு வர அனுமதி இல்லை. பள்ளியின் அனைத்து இடங்களும் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட வேண்டும். தனிநபர் இடைவெளி, சமூக இடைவெளி ஆகியவை கடைபிடிக்கப்பட வேண்டும். அறிவுறுத்தல்கள் தாங்கிய அறிவுப்புகளை போதுமான அளவில் வைக்க வேண்டும் போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டன.