தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வத்துக்கும் இடையேயான அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வானது செல்லும் என்ற தீர்ப்பை வழங்கி ஓ. பன்னீர்செல்வத்தின் மனுவை தள்ளுபடி செய்தது.


எடப்பாடி தலைமையில் கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லும் என்று உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனுவானது உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. இதில், இரு தரப்பு வாதங்களும் நீதிபதிகள் முன்பு வைத்தனர். இதையடுத்து, அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் நடத்த ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த தடையையும் உச்சநீதிமன்றம் நீட்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வழக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, 2023ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதிக்கும், அதன் பின்னர் ஜனவரி 9ஆம் தேதிக்கும், வழக்கினை மீண்டும் ஒத்திவைத்தது. கடந்த 16ஆம் தேதி இரு தரப்பையும் எழுத்து பூர்வமான பதிலை கேட்டனர். இந்த வழக்கின் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு தான் அதிமுகவின் அரசியல் எதிர்காலம் இருக்கப்போகிறது என்பதால் இந்த தீர்ப்பு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்பட்டது.  


தற்போது உச்சநீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பின் மூலம் கட்சி எடப்பாடிக்கு தான் என தெரிய வந்துள்ளது. இந்த திர்ப்பை பற்றி முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறுகையில், “மகிழ்ச்சியான ஒரு தருனம். அதிமுக மகிழ்ச்சியாகவும் உற்சாகத்தோடும் இந்த தீர்ப்பை வரவேற்கிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் வெற்றிக்கு முத்தாப்பாக கிடைத்த தீர்ப்பு இது. பொதுக்குழு செல்லும் என்பதால் இனி பன்னீர்செல்வம் தரப்பில் எந்த அடிப்படை உரிமையும் கோர முடியாது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை தொடர்ந்து 3வது முறையாக சாமானியனுக்கு கிடைத்த வெற்றி. இனி எடப்பாடி தலைமையில் அதிமுக வீரநடை போடும். உச்சநீதிமன்றறத்தின் இந்த தீர்ப்பு அதிமுகவிற்கு ஊக்கத்தை தருவதோடு மட்டுமல்ல, பொதுமக்கள் பார்வையில் இயக்கம் ஒன்றுபட்டுள்ளது. எடப்பாடி தலைமையில் வலிமை பெற்றுள்ளது” என கூறியுள்ளார்.


அதேபோல் முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி இந்த தீர்ப்பு தொடர்பாக பேசுகையில், “ தர்மம் வென்றுள்ளது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தி அடைந்தது. அவர்கள் நடத்திய தர்ம யுத்தம் வெற்றியடைந்துள்ளது. பல தேர்தலை சந்தித்துள்ளது அதிமுக. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் மனம் குளிர்ந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.