தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் பிறந்து அதிமுகவில் படிப்படியாக உயர்ந்து சசிகலாவால் தமிழக முதல்வராக்கப்பட்டு பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் அதிமுகவை தன்வசப்படுத்தியுள்ள அரசியல் வித்தகர் எடப்பாடி கே பழனிசாமியின் பிறந்தநாள் இன்று. அவருடைய பிறந்தநாளை ஒட்டி அவரது அரசியல் வாழ்வு பற்றிய தொகுப்பு இதோ..


சேலம் மாவட்டம், எடப்பாடிக்கு அருகிலுள்ள சிலுவம்பாளையத்தில் பிறந்தவர் தான் எடப்பாடி கே பழனிசாமி. இவர், மே 12, 1954-ம் ஆண்டில் கருப்ப கவுண்டர், தவசியம்மாள் தம்பதிக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவருக்கு ராதா என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.  ஈரோடு வாசவி கல்லூரியின் விலங்கியல் படிப்பில் சேர்ந்த பழனிசாமி அதனை முழுமையாக முடிக்கவில்லை. மாறாக வெல்ல வியாபாரம் செய்துவந்தார்.


அரசியலுக்குள் நுழைந்தது எப்படி?


வியாபாரம், விவசாயம் என்று இருந்த பழனிசாமியை அதிமுக அமைச்சராக இருந்த செங்கோட்டையன் தான் கட்சிக்கு அறிமுகம் செய்திருக்கிறார். 1974 ஆம் ஆண்டு அதிமுக கிளைச் செயலாளர் ஆனார் பழனிசாமி. அதுதான் அவரின் அரசியல் வாழ்வின் பிள்ளையார் சுழி. கோனேரிப்பட்டி என்ற கிராமத்தில் அதிமுக கிளைச் செயலாளர் ஆனார் பழனிசாமி. அதன் பின்னர் அப்படி கிட்டதட்ட இரண்டு தசமங்கள் கடந்தோடின. வெல்ல வியாபாரத்தில் நன்றாகவே சோபித்துவந்தார்.  


1990 ஆம் ஆண்டு சேலம் வடக்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அது அவரது அரசியல் வாழ்வில் ஒரு திருப்புமுனை என்றால் அது மிகையாகாது. அடுத்தடுத்து வந்த ஆண்டுகள் பழனிசாமிக்கு அரசியலில் ஏற்றம் தருவதாகவே அமைந்தன. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், 1990ல் சேலம் வடக்கு மாவட்ட கழக இணைச் செயலாளர், 1991ல் சேலம் வடக்கு மாவட்டச் செயலாளர், 1993ல் சேலம் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவர்,  2001ல் தமிழ்நாடு சிமென்ட் கார்ப்பரேஷன் தலைவர் என்று டாப் கியரில் சென்று கொண்டிருந்தார். அதிமுகவில் கொள்கை பரப்புச் செயலாளராவது தொண்டர்களுக்கு மிகப் பெரிய அந்தஸ்து. அப்படியாக 2006-ல் கழகக் கொள்கை பரப்புச் செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி.


அமைச்சர் பதவி:


கிளைச் செயலாளர் டூ கொள்கை பரப்புச் செயலாளர் என 30 ஆண்டுகளாக அதிமுகவுக்காக அனைத்து மட்டங்களிலும் உழைத்த ஒரு தொண்டன் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.  அவரது நெடிய பயணத்திற்கு கட்சி வெகுமதி அளிக்காமல் இல்லை. 2011-ல் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராகவும், 2016-ல் பொதுப்பணித்துறை அமைச்சராகவும்  பதவி வகித்தார்.


சட்டமன்ற, நாடாளுமன்ற விஜயம்:


1989ல் முதன்முதலாக சட்டமன்றத் தேர்தலில், போட்டியிட்டார். அப்போது அவர் அ.தி.மு.க ஜெ பிரிவின் சார்பாக, எடப்பாடி தொகுதியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டார். இதில் வெற்றிபெற்று முதன்முறையாக சட்டமன்றத்துக்குள் நுழைந்தார். பின்னர் 1991-ல் மீண்டும் எடப்பாடி தொகுதியிலிருந்து போட்டியிட்டு வெற்றிபெற்றார். 1998-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினரானார்.


சர்ச்சைக்கு மத்தியில் முதலமைச்சர்:


அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் வரலாறு கொஞ்சம் நீண்டதுதான் என்றாலும் கூட சாமான்ய மக்கள் மத்தியில் அவர் பெருமளவில் அறிமுகமானது என்னவோ 2017ல் தான்.  தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 2016 டிசம்பரில் மறைந்தார். அதன்பின்னர் ஏற்கனவே இருந்த சொத்துகுவிப்பு வழக்கில் வி.கே.சசிகலா சிறை சென்றார்.


அவர் சிறை செல்லும் முன்னர் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கினார். 2017-ல் அ.தி.மு.க-வின் சட்டமன்ற கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக முதல்வராகப் பதவியேற்றார் எடப்பாடி கே பழனிசாமி. அ.தி.மு.க.வில் அமைச்சராக இருந்து வந்த இ.பி.எஸ். தமிழ்நாட்டு மக்களுக்கு முதல்வராக அன்று முதல் அடையாளமானார்.  அதிமுக ஐந்து ஆண்டுகள் ஆட்சியை நடத்தாது என்ற விமர்சனங்களுக்கு மத்தியில் அந்த ஆட்சிக்காலத்தை நிறைவு செய்து பின்னர் நடந்த 2021 தேர்தலில் தோல்வியடைந்தார்.