உனக்கு காதலி இருக்கா? .. வயசு என்ன?.. டார்ச்சர் பண்றீங்களேப்பா.. நிர்வாகியிடம் திண்டுக்கல் சீனிவாசன் டென்ஷன்!
தமிழ்நாட்டை திமுக, அதிமுக தான் மாறி மாறி ஆண்டு வந்தது. திடீரென நடுவில் தவெக வருகிறது என சொன்னால் யாருக்கு தெரிய போகிறது என்று மக்கள் ஓட்டு போட்டுள்ளார்கள். அதனால் நாம் கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கணும்.

தங்களின் வாரிசுகள் தவெகவில் இணைவதை தடுக்காத அதிமுக பிரமுகர்களுக்கு எல்லாம் எதற்கு வேட்டி, சட்டை, மீசை என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கண்டித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற அண்ணா தொழிற்சங்க பேரவை கூட்டத்தில் கலந்துக் கொண்ட அவர் கடந்த 2 மாத காலத்தில் நடைபெற்ற பல்வேறு அரசியல் நிகழ்வுகள் பற்றி பேசினார்.
அப்போது, “பணம் கொடுக்காமல் ஓட்டு வாங்கி புரட்சி செய்ததாக விஜய் சொல்கிறார். அதே பணம் கொடுக்காமல் நாமும் ஓட்டு கேட்போம். என்ன நடக்கிறது என பார்ப்போம். ஏனென்றால் இது ஒரு பெரிய ஏமாற்று வேலையாக உள்ளது. தமிழ்நாட்டை திமுக, அதிமுக தான் மாறி மாறி ஆண்டு வந்தது. திடீரென நடுவில் தவெக வருகிறது என சொன்னால் யாருக்கு தெரிய போகிறது என்று மக்கள் ஓட்டு போட்டுள்ளார்கள். அதனால் நாம் கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கணும். நமக்கு ஓட்டு போடும் மக்களை வீடு வீடாக சென்று பாருங்கள். எடப்பாடி பழனிசாமி ஆன்மிகமாகவும், ஆண்மையாகவும் அதிமுகவை நடத்தி வருகிறார்.
கட்சியில் இருந்து சென்றவர்கள் மீண்டும் மாவட்ட செயலாளர் பதவி கேட்டார்கள். அதை நீங்கள் சொல்ல வேண்டாம். ஆனால் உங்களுக்கு பொருத்தமான பதவி தருகிறேன் என சொல்லி வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதனுக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி கொடுத்தார். அதென்ன ரோட்டில் போடும் அளவுக்கு சாதாரண பதவியா?.. இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து அதிமுக பிரமுகர்களின் வாரிசுகள் தமிழக வெற்றிக் கழகத்தில் சேருவதைக் கண்டித்த திண்டுக்கல் சீனிவாசன், இதனை தடுக்கவில்லை என்றால் என்ன ஆண்?.. உங்களுக்கு எல்லாம் எதற்கு வேட்டி, சட்டை, மீசையெல்லாம் இருக்கிறது. அப்போது நிர்வாகி ஒருவர் அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருந்ததைக் கண்ட அவர், உனக்கு என்ன காதலி இருக்கா?.. எப்ப பார்த்தாலும் போன் பேசிட்டே இருக்க?.. உன் வயசு என்ன?.. நீ பாட்டுக்கு போற வர்ற.. போனை முதல்ல உள்ளே வையா என டென்ஷனாகி சொல்ல அங்கிருந்தவர்கள் சிரித்து விட்டனர்.
Also Read: CM Vijay: "இந்த பக்கமே வரக்கூடாது.." கூட்டணி கட்சிகளை விரட்டிவிட்ட முதலமைச்சர் விஜய் - எதற்காக?
இதற்கிடையில் தான் சொல்ல வந்ததை மறந்த திண்டுக்கல் சீனிவாசன் எங்கப்பா விட்டேன் என தெரியல.. இவங்க வேற இடையில வந்து மறக்கடிச்சிட்டாங்க என கலகலப்பான பேசினார். ஆனால் மற்றொரு நிர்வாகி செல்போனில் பேசியதைக் கண்டித்த அவர் செல்போனை உடைத்து விடுவேன். பொண்டாட்டி கிட்ட அப்புறம் பேசுங்கப்பா.. நாங்க என்ன வேலை இல்லாமலா வந்துருக்கோம். உன் பொண்டாட்டி என்ன சோறாக்கி வைத்திருக்கிறாரா.. தயவுசெய்து உட்காருப்பா.. கருத்து பேச நாங்க வந்திருக்கோம். கேட்டுக்கப்பா.. நல்ல கூட்டத்தில் குழப்பம் பண்ணாதீங்கப்பா” என மனம் நொந்து போய் பேசினார்.
ட்ரெண்டிங் செய்திகள்





















