குடியரசு தினவிழா கொண்டாட்டத்தில் தமிழ்தாய் வாழ்த்து பாடலுக்கு  ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எழுத நிற்க முடியாது எனக் கூறிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்யை ஏற்படுத்தியது. தற்போது, இந்த சம்பவத்துக்கு  தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


நாடு முழுவதும் 73ஆவது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.டெல்லி ராஜபாதையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியேற்றினார். விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் முப்படைகள் தளபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 


அதேபோல், சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அவர் தேசிய கொடியேற்றும்போது, விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன. மேலும் ஆளுநர் ஆர்.என்.ரவி, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.


குடியரசு தினத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள் அந்தந்த மாவட்ட தலைநகரில் தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தினர். மேலும் வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் உள்ள ரிசர்வ்  வங்கி அலுவலகத்தில்  குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. ரிசர்வ் மண்டல இயக்குனர் தேசியக் கொடியை ஏற்றி மாரியாதை செலுத்தினார்.  நிகழ்ச்சியின் இறுதியில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கவிடப்பட்டது.


ஆனால் அதற்கு வங்கி ஊழியர்கள் யாரும் எழுந்து நிற்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கிருந்தவர்களிடம் இதுகுறித்து சிலர் கேட்டபோது எழுந்து நிற்கமுடியாது என அவர்கள் கூறினார்கள். தமிழ்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டிய தேவையில்லை என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக கூறியது மேலும்  சர்ச்சையை ஏற்படுத்தியது.


தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கவிடப்பட்டால் அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்திருக்கும் சூழலில் வங்கி அலுவலர்கள் எழுந்து நிற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  மேலும் எழுந்து நிற்காதவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பலர் கோரிக்கை வைத்துவருகின்றனர்.


இந்த நிலையில்,  தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த சம்பவத்துக்கு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோவை  தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட அமைச்சர், வங்கிகள் ஒரு சமூகத்திற்கு அவசியம். மேலும், ரிசர்வ் வங்கி, ஒரு வங்கி ஒழுங்குமுறை மற்றும் நாணயகொள்கை மேலாளர் ஆகியோரும் கூட. இந்த வீடியோ வருத்தமளிக்கிறது. மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுக்களின் சிறப்பு கூட்டம்  நடைபெற்ற 2 நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது. அதில், தமிழ்நாடு அரசு வங்கி அதிகாரிகள் செய்ய விரும்பும் வங்கிகளுக்கான வழிகாட்டுதல்களை கோடிட்டுக் காட்டினோம். இதுதொடர்பான பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்று கூறியுள்ளார்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண