Bharathiraja: தமிழ் சினிமாவை புரட்டிப்போட்ட இயக்குநர் இமயம்.! மாய உலகை நிஜத்திற்கு மாற்றிய பாரதிராஜா.!
ஸ்டூடியோக்களுக்கு உள்ளேயே எடுக்கப்பட்டு, மக்களுக்கு மாயஜாலமாக இருந்த தமிழ் திரையுலகை, நிஜத்திற்கு கொண்டு வந்து புரட்சியை ஏற்படுத்தினார் இயக்குநர் இமயம் பாரதிராஜா. அவர் செய்த சாதனை என்ன.? பார்க்கலாம்.

தமிழ் திரை உலகிற்கு பேரிடியை இறக்கியது போல், இன்று காலை இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவுச் செயதி அமைந்தது. இயக்குநர் இமயம் என்ற பெயர் அவருக்கு சாதாரணமாக வந்துவிடவில்லை. ஸ்டூடியோக்களுக்கு உள்ளேயே முடங்கிக் கிடந்த தமிழ் சினிமாவை, வெளி உலகத்திற்கு கொண்டு வந்து, மக்களை சினிமாவோடு ஒன்றிப்போக வைத்தவர் பாரதிராஜா. அவரது அந்த சாதனையை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.
ஸ்டூடியோக்களில் இருந்த திரையுலகை வெளி உலகிற்கு கொண்டு வந்தவர்
கோலிவுட் என அழைக்கப்படும் தமிழ் திரையுலகையே, பாரதிராஜாவிற்கு முன், பாரதிராஜாவிற்குப் பின் என்றே பிரிக்கலாம். ஆம், பெரும்பாலும் ஸ்டூடியோக்களுக்கு உள்ளேயே, அதாவது செயற்கையான அரங்கங்களுக்குள்ளேயே படமாக்கப்பட்டு, மக்களுக்கு ஒரு மாயாஜாலமாகவே திரைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன.
அப்படிப்பட்ட திரையுலகை, மண் வாசனையை முகரவைத்தவர் பாரதிராஜா. தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றியமைத்து, தனது முதல் படமாக 1977-ல் வெளிவந்த ‘16 வயதினிலே‘ திரைப்படத்தை, கிராமத்து மண்வாசனையுடன், இயற்கையான சூழல்களில், திறந்தவெளிப் பகுதிகளிலேயே படமாக்கி, கோலிவுட்டிற்குள் புதிய யுக்தியை கொண்டுவந்தார்.
முதல் படத்திலேயே முத்திரை பதித்த பாராதிராஜா
தனது முதல் படமாக ‘16 வயதினிலே‘ படத்தில், அதுவரை நட்சத்திரங்களாகவே பார்க்கப்பட்டு வந்த கமல்ஹாசன், ஸ்ரீதேவி போன்ற கலைஞர்களை, யதார்த்த மனிதர்களாக மக்களை பார்க்க வைத்தார். அதுவரை கிராமிய படங்களுக்கு என்று இருந்த ஒரு இலக்கணத்தை உடைத்தார் பாரதிராஜா. ஸ்டுடியோக்களுக்கு உள்ளேயே திரைப்படங்கள் படமாக்கப்பட்டு வந்த நிலையில், தமிழ் சினிமா வரலாற்றில், முதல் முறையாக, முழு படத்தையும் வெளிப்புற படப்பிடிப்புத் தளத்திற்கு கொண்டு சென்ற பெருமை பாரதிராஜாவையே சாரும்.
‘16 வயதினிலே‘ திரைப்படத்தில் ஒரு வெள்ளந்தியான சப்பாணியாக வந்த கமல்ஹாசனையும், துடுக்கான கிராமத்துப் பெண்ணாக வந்த மயிலையும்(ஸ்ரீதேவி) ரசிகர்கள் கொண்டாடி தீர்த்ததோடு, அந்த கதாபாத்திரங்கள் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தன.
அது மட்டுமல்லாமல், தனது படங்கள் மூலமாக, கண்களுக்கு விருந்து படைக்கும் கிராமத்து பின்னணிகளையும், யதார்த்தமான காட்சியமைப்பு, எளிமையான காதல் காதல் காட்சிகள், இயல்பான கதாபாத்திர வடிவமைப்பு, பஞ்ச்சான வசனங்கள் என, முதல் படத்திலேயே முத்திரை பதித்தார் பாரதிராஜா. திரைப்படம் தொடங்கும்போது, ‘என் இனிய தமிழ் மக்களே‘ என கைகளை கூப்பி ஒலிக்கும் அவரது கம்பீரக் குரலுக்கும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு.
கொண்டாடித் தீர்த்த ரசிகர்கள்
முதல் படத்தில் மண்வாசனையை காட்டிய பாரதிராஜா, தன்னால் மிரட்டவும் முடியும் என்று அடுத்த வருடமே நிரூபித்தார். தனது முதல் படத்தில் வெள்ளந்தியாக வந்த கமல்ஹாசனை வில்லனாக மாற்றி, 1978-ல் ‘சிகப்பு ரோஜாக்கள்‘ திரைப்படத்தை கொடுத்து, திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தார்.
தொடர்ந்து, அதே வருடத்தில், கிழக்கே போகும் ரயில், அடுத்தடுத்த வருடங்களில் நிறம் மாறாத பூக்கள், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, புதுமைப் பெண், மண்வாசனை, ஒரு கைதியின் டைரி என முத்து முத்தான படங்களை கொடுத்தார் பாரதிராஜா.
1985-ல் நடிகர் திலகம் சிவாஜி கணேசனே நினைத்துப் பார்க்காத ‘முதல் மரியாதை‘ என்ற ஒரு படத்தை அவருக்கு கொடுத்தார் பாரதிராஜா. எவ்வளவோ படங்களில் நடித்திருந்தாலும், அதுவரை தன்னையே அதுபோல் ஒரு வித்தியாசமான, யதார்த்தமான கதாபாத்திரத்தில் திரையில் பார்த்திராத நடிகர் திலகம் வியந்து போனார்.
1986-ல், வில்லனாக இருந்த சத்யராஜை கதாநாயகனாக்கி ‘கடலோரக் கவிதைகள்‘ வாசித்தார். அந்த மிகவும் யதார்த்தமான திரைப்படம் திருப்புமுனையாக அமைய, தமிழ் திரையுலகில் ஒரு தவிர்க்கமுடியாத நடிகராக மாறினார் சத்யராஜ். தொடர்ந்து, ஏராளமான படங்களை கொடுத்து இயக்குநர் இமயம், கார்த்திக், ராதா, ராதிகா, சுதாகர், பிரியாமணி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்களை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.
இப்படி, தமிழ் சினிமாவையே புரட்டிப்போட்ட இயக்குநர் இமயம் பாராதிராஜாவை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். ஆரம்பத்தில் நடிகராக வேண்டும் என்ற ஆசையோடு திரையுலகிற்கு வந்தவர், பின்னாளில் நடிகராவும் மிளிர்ந்தார். இன்று அவரது இறப்பு, ஒட்டுமொத்த திரை உலகிற்கும் ஒரு பேரிழப்பு என்பதே நிதர்சனம்.
Before You Go
Kovai TVK Issue : பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்
ட்ரெண்டிங் செய்திகள்






















