வேளாண்துறைக்கு என தனி பட்ஜெட் போடுவதை விட முதல்வர் அறிவித்ததை எங்களுக்கு பெற்றுத் தாருங்கள் என்பது தான் உழவர் நலன் மற்றும் வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்களிடம் நாங்கள் வைக்கும் கோரிக்கை என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத் தலைவா் அய்யாக்கண்ணு பேட்டியளித்தார்.

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் சாத்துகூடல் கீழ்பாதி கிராமத்தில் கோவில் குளம் இருந்த இடம், நீர் நிலை புறம்போக்கு என்று அரசு பதிவேட்டில் மாறியுள்ளது. இந்த இடத்தில் ஊராட்சி சார்ந்த கட்டிடங்கள் கட்ட ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் இதனை சரி செய்து தர அப்பகுதி விவசாயிகள் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில்  மாவட்ட ஆட்சியரை சந்தித்து விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் அய்யாக்கண்ணு மனு அளித்தனர்.

 

 அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த  அய்யாக்கண்ணு, ”கடலூர் மாவட்டத்தில் ஆருரான் சக்கரை ஆலையில் விவசாயிகளுக்கு தரவேண்டிய நிலுவைத் தொகையை உடனே தர வேண்டும், கடலூர் மாவட்டத்தில் உளுந்து முற்றிலுமாக அழிந்துவிட்டது. ஒன்பது மாவட்டங்களில் நெல்லுக்கு இழப்பீடு வழங்குவது போல உளுந்துக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது பற்றி எல்லாம் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளோம்” என்று கூறினார்.

 

தஞ்சாவூா் மாவட்டம் திருமண்டங்குடிமில் 100 நாட்கள் விவசாயிகள் போராடி வரும் நிலையிலும் கூட அரசு செவி சாய்க்காததற்கு காரணம் விவசாயிகள் ஒற்றுமையாக பாடுபட மாட்டார்கள் என்ற எண்ணம் தான் மேலும் அரசு விவசாயிகளை அடிமை போல் பார்ப்பதாகவும் அய்யாக் கண்ணு வேதனை தெரிவித்தார்.

 

மத்திய சர்க்காரையும் மாநில சர்க்காரையும் வரும் தேர்தலில் முடிவு செய்ய போவதே விவசாயிகள் தான், தமிழக முதல்வர் கரும்புக்கு 4000 ரூபாயும் நெல்லுக்கு 2500 ரூபாயும் தருவதாக கூறியிருந்தார் ஆனால் தரவில்லையே, 100% கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் என்று கூறிய முதல்வர் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றவில்லையே? என அவர் கேள்வி எழுப்பினார்.

 

வேளாண்  தனி பட்ஜெட் போடுவதை விட முதல்வர் அறிவித்ததை எங்களுக்கு பெற்றுத் தாருங்கள் என்பதே அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்களிடம் நாங்கள் வைக்கும் கோரிக்கை, மேலும் நெல்  கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக பல இடங்களில் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதைப் பற்றியும் மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துரைத்தும் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்ததாக  அவர் தெரிவித்தார்.

 

அதிகாரிகள் விவசாயிகள் மற்றும் பொதுமக்களை நாய்க்குட்டி போல பார்க்கின்றனர் விவசாய சங்க தலைவர்களை சொறிநாய் போல பார்த்து வேலை செய்கின்றனர். இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளையும் ஒருங்கிணைத்து கூட்டம் போட உள்ளோம், விவசாயி ஆதரவு இல்லாமல் அரசியலில் வெற்றி பெற முடியாது என்ற நிலை உருவாகும், விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து கூட்டம் போட்டதற்கு பிறகு இந்த நிலை வருகின்ற தேர்தலில் மாறும். அதன் பிறகாவது அதிகாரிகள் விவசாயிகளுக்கு மதிப்பளிப்பார்கள் என நம்புகிறோம் என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.