கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் பலியான விவகாரத்தில், தவெக தலைவர் விஜய் மீதான அன்பும் பாசமும் குறையவில்லை என்று அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement


சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர் கூறியதாவது:


’’கரூரில் 41 பேர் பலியான விவகாரத்தில், தமிழக மக்களுக்கும் சரி, கரூர் மக்களுக்கும் சரி.. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மீதான அன்பும் பற்றும் குறையவே இல்லை. இதை எல்லாம் பொறுத்துக்கொள்ளாமல் அவதூறுகள் பரப்பப் படுகின்றன. திமுக இதை எதிர்பார்க்கவே இல்லை.


நிலைதடுமாறி பேச்சு


சொல்லப்போனால், கரூர் சம்பவத்துக்குப் பிறகு, தவெகவை முடக்கி விடலாம். விஜய் மீது அவதூறு பரப்பி, மக்கள் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் கலைத்து விடலாம் என்று நினைத்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை. அதனால் நிலைதடுமாறி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.


கரூர் சம்பவத்தில் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. நீதி வெல்லும். உண்மையான குற்றவாளிகள் நிச்சயம் வெளியே கொண்டு வரப்படுவார்கள்’’ என்றார் அருண்ராஜ்.


அவர்களின் கற்பனை


தவெகவில் நிறைய ஸ்லீப்பர் செல்கள் இருப்பதாகச் சொல்கிறார்களே என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, அது அவர்களின் கற்பனை. அப்படியெல்லாம் எதுவுமே கிடையாது என்று அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.