கருத்து வேறுபாடும் - வாக்குவாதமும்

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள ஆனந்தபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன். தேங்காய் வியாபாரம் செய்து வரும் இவரது மனைவி 45 வயதுடைய கோசலை. இந்த தம்பதியருக்கு 23 வயதுடைய திவ்யா என்ற மகள் உள்ளார்.

Continues below advertisement

குடும்பத்துடன் வசித்து வந்த திவ்யாவுக்கு, அதே பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய கதிர்வேல் என்பவருடன் கடந்த ஆறு மாதங்களாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

இந்த நிலையில், திவ்யாவும் கதிர்வேலும் அடிக்கடி வெளியில் சுற்றி வந்த போது இவர்களது காதல் குறித்து அறிந்த திவ்யாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் கதிர்வேல் குடும்பத்தினரும் இந்த காதலுக்கு முழுமையான சம்மதம் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக திவ்யா வீட்டில் கருத்து வேறுபாடும், வாக்குவாதமும் இருந்து வந்ததாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Continues below advertisement

தூக்கிட்டு தற்கொலை

எனவே திவ்யாவை திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்த கதிர்வேல் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் இரவு யாருக்கும் தெரியாமல் திவ்யா வீட்டிற்கு சென்று அவரை வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள அழைத்திருக்கிறார்.

அப்போது இதனை கவனித்த திவ்யாவின் அவரது தாய் கோசலை, மகளை தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்த முயன்றதாக தெரிகிறது. இருப்பினும், தாயின் பேச்சை மீறி திவ்யா காதலருடன் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.

இதனால் மிகுந்த மனவேதனை மற்றும் அதிர்ச்சியடைந்த கோசலை, வீட்டிற்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சிறிது நேரத்திற்குப் பிறகு வீட்டில் இருந்தவர்கள் கோசலை நீண்ட நேரமாக வெளியே வராததால் அறைக்கு சென்று பார்த்த போது , அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், கோசலையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து , காதல் விவகாரம் மற்றும் குடும்பப் பிரச்சினை காரணமாக இந்த விபரீதம் நிகழ்ந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் தற்கொலை தூண்டியதாக திவ்யா மற்றும் அவரது காதலன் கதிர்வேல் மீது வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.