கட்டையால் தாக்கி கொலை
ஈரோடு மாவட்டம் சக்தி சாலை செங்குந்தர் நகர் 6 - வது வீதியைச் சேர்ந்தவர் 50 வயதுடைய கண்ணன். இவர் அதே பகுதியில் உள்ள காலண்டர் மில்லில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்திருக்கிறார். குடிப்பழக்கம் உடைய கண்ணன் அவ்வப் போது குடித்து விட்டு பணிபுரியும் மில்லில் படுத்து தூங்குவது வழக்கம் என சொல்லப்படுகிறது.
அது போல கடந்த சனிக்கிழமை இரவு பணிபுரியும் இடத்தில் சம்பளம் பெற்ற கண்ணன் டாஸ்மாக் சென்று மது அருந்தி விட்டு மீண்டும் உறங்க மில்லுக்கு சென்றிருக்கிறார்.
அப்போது கண்ணனை வழி மறித்த மர்ம நபர் ஒருவர் அவரை கட்டையால் சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றிருக்கிறார். இந்த தாக்குதலில் கண்ணனின் தலை மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அவர், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.
சிசிடிவி கேமிராவில் ஆய்வு
பின்னர் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த அக்கம் பக்கத்தினர், கண்ணன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக வீரப்பன் சத்திரம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், கண்ணனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு, கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் கட்டை உள்ளிட்ட முக்கிய தடயங்களை சேகரித்தனர்.
மேலும், கொலையில் ஈடுபட்ட மர்ம நபரை கண்டறிய சம்பவம் நடைபெற்ற பகுதியிலிருந்த சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்தக் கொலை முன்விரோதம் காரணமாக நடைபெற்றதா ? அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா ? என்ற பல்வேறு கோணங்களில் வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
