Erode By Election:  ஈரோடு கிழக்கில் அ.தி.மு.க. தனித்தே களமிறங்குவதாக முன்னாள் அமைச்சரும், எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவருமான கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும், கூட்டணியில் இருப்பவர்கள் யார்? யார்? என்பது குறித்து ஓரிரு நாளில் இடைக்கால பொதுச் செயலாளார் அறிவிப்பார் என கூறியுள்ளார். மேலும், 3 நாட்களுக்குள் இரட்டை இலை சின்னம் தொடர்பாக நல்ல தீர்ப்பு வரும் எனவும் கூறியுள்ளார். ஓபிஎஸ் ஆலோசனை கூட்டம் நடத்துவது பற்றி எங்களுக்கு எந்தவிதமான அக்கறையும் கிடையாது எனவும் செங்கோட்டையன் கூறினார். 


ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27-ந் தேதி நடைபெற உள்ளது. தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் களம் காண்கிறார். ஆனால், அ.தி.மு.க. கூட்டணியில் இழுபறியும், குழப்பங்களும் நீடித்து வருவதால்  அக்கட்சி தொண்டர்கள் கலக்கத்தில் உள்ளனர். 


விரைவில் அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். 


ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ( Erode East By Election ) தொடர்பாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, இந்த இயக்கத்தை சிலர் எதிரிகளோடு இணைந்து எட்டப்பர் வேலை செய்து அழிக்க வேண்டும் என நமக்கு விரோதமாக செயல்படுகிறார்கள் என்றும் அவர்களுக்கு இந்த தேர்தல் பாடமாக அமைய வேண்டும் என்றார்.


நெஞ்சை நிமிர்த்தி வாக்கு கேளுங்கள்


”இடைத்தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என இந்தியாவே உற்று நோக்குகிறது. நமது உழைப்பு தேனீக்கள் போல் சுறுசுறுப்பாக இருந்து சிந்தாமல் சிதறாமல் சரித்திர வெற்றியை பெற வேண்டும். கொங்கு மண்டலத்தில் அதிமுகவை தோற்கடித்ததாக வரலாறு கிடையாது. சரியான முறையில் உழைத்தால் வெற்றி நிச்சயம். அதிமுக ஆட்சியில் தான் நிறைய திட்டங்கள் செய்து இருக்கிறோம் .எனவே நாம் நெஞ்சை நிமிர்த்தி வாக்கு கேட்கலாம். அவர்கள்(திமுக கூட்டணிக் கட்சியினர்) கூனி குறுகி வாக்கு கேட்பார்கள்” என்றார்.


அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை தான் தற்போது நிறைவேற்றி திறந்து வைக்கின்றனர் என தெரிவித்த அவர் இந்த தொகுதியில் அதிமுக ஆட்சியில் தான் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என பட்டியலிட்டார். ”தேர்தலில் ஒவ்வொருவரும் வேட்பாளர் என எண்ணி பணியாற்றி அதிமுக வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும். அதிமுகவின் இரும்பெரும் தலைவர்களுக்கான எம் ஜி ஆர், ஜெயலலிதா ஆகியோரின் அரசியல் பள்ளியில் படித்த மாணவர்கள் என்று காட்ட, அவர்கள் கற்றுக்கொடுத்த அரசியலை பயன்படுத்தி இத்தேர்தலில் மிகப்பெரிய சாதனையை படைக்க வேண்டும்” என நிர்வாகிகளிடம் கேட்டுக் கொண்டார்.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று கூறியதும்  என்பது குறிப்பிடத்தக்கது. 


ஜெயக்குமார் பேட்டி


அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது, “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார். இரட்டை இலை சின்னம் எங்கள் தரப்புக்குத்தான் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடு குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும். அ.தி.மு.க. ஆட்சிமன்ற குழு வேட்பாளரை அறிவிக்கும் என நேற்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.