ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் அதிமுக வேட்பாளராக, தென்னரசு என்பவரை அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  ஈரோடு மாநகர் மாவட்ட எம்ஜிஆர்  மன்றச் செயலாளராக உள்ள, முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைதேர்தலில் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






யார் இந்த தென்னரசு?


2001-ல் ஈரோடு தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராகக் களமிறங்கிய கே.எஸ்.தென்னரசு, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் என்.கே.கே.பெரியசாமியை 24,440 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். ஈரோடு கிழக்குத் தொகுதியாகப் பிரிக்கப்பட்ட பிறகு 2016 தேர்தலிலும் வெற்றி பெற்றவர் என்பதால், தொகுதி மக்களிடையே நன்கு பரிட்சயமானவர்.  ஒரு வேளை இரட்டை இலைச் சின்னம் இல்லாவிட்டாலும், ஈரோடு கிழக்குத் தொகுதியில் ஏற்கெனவே இரண்டு முறை எம்.எல்.ஏ-வாக இருந்த கே.ஏ.தென்னரசுக்கு வாய்ப்பு கொடுப்பதன் மூலம்  கூடுதல் வாக்குகளைப் பெற முடியும் என்ற நோக்கில் ஈபிஎஸ் தரப்பு அவருக்கு வாய்ப்பளித்துள்ளது. தற்போது இவர், ஈரோடு மாநகர் மாவட்ட எம்ஜிஆர்  மன்றச் செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


 


ஈரோடு கிழக்கு நிலவரம் என்ன?


2011-ம் ஆண்டுக்கு முன்புவரை பிரிக்கப்படாத ஈரோடு தொகுதியாக இருந்த நிலையில், 2011-ம் ஆண்டில் தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு ஈரோடு கிழக்கு, மேற்கு என இரண்டு தொகுதியாகப் பிரிக்கப்பட்டன. அதைதொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதியில் இதுவரை நடைபெற்ற மூன்று தேர்தலில் அ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இரண்டு முறையும், தி.மு.க கூட்டணி ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளன. இந்த நிலையில் தான் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, இரண்டு முறை அதிமுக எம்.எல்.ஏவாக வெற்றி பெற்ற தென்னரசு, ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் ஈபிஎஸ் சார்பிலான அதிமுக அணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.