திருமாவளவன் மனசாட்சியோடு பேச வேண்டும், விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அனுமதி கொடுக்க எப்படியெல்லாம் அலைக்கழித்தார்கள் என விஜய் மீதான திருமாவின் கருத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார்.
இபிஎஸ் சுற்றுப்பயணம்:
'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்து வருகிறார்.அதன் ஒருபகுதியாக இன்று தருமபுரியில் பிரசாரக் கூட்டத்தில் இபிஎஸ். ஈடுபட்டார்.
அப்போது கரூர் துயர நிகழ்வுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இரண்டு நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்தினார்.
திருமாவுக்கு கேள்வி:
”இன்று ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி; எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி என்று ஆகிவிட்டது. முதல்வர் ஸ்டாலின் கூடும் இடங்களில் அதிக பாதுகாப்பு வழங்கப்படும் நிலையில், மற்ற கட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை.
அரசியல் கட்சி கூட்டத்திற்கு பாதுகாப்பு கொடுப்பது அரசின் கடமை. இனி வருங்காலங்களில் உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும். ஆனால் ஆளே இல்லாத இடத்தில் ஆளுங்கட்சி கூட்டத்திற்கு காவல் துறை பாதுகாப்பை குவிக்கின்றனர். இதற்கெல்லாம் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் பதில் கொடுப்பார்கள். கூட்டணி கட்சிகள் ஜால்ரா போடுகின்றன.
திருமாவளவன் மனசாட்சியுடன் பேச வேண்டும். மது ஒழிப்பு மாநாடு நடத்த அனுமதி கொடுக்காமல் எப்படி அலைக்கழித்தார்கள் என்று நீங்களே பேசுனீர்கள். கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் இதே நிலைமை தான், என்றார்.
விஜய்க்கு அட்வைஸ்:
” கரூரில் நடைபெற்ற சம்பவத்தில், ஆட்சியாளர்கள் முறையாக பாதுகாப்பு கொடுத்திருந்தால், 41 உயிர்கள் பாதுகாக்கப்பட்டிருக்கும். 41 பேர் உயிரிழப்பிற்கு அரசாங்கம் தான் பொறுப்பேற்க வேண்டும். 41 பேர் இறந்ததற்கு காரணம் திமுக தான். முதலமைச்சர் கையில் தான் காவல் துறை இருக்கிறது. அவர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியிருந்தால், இந்த உயிர்களை பாதுகாத்திருக்கலாம்., அதே போல் விஜய் இதற்கு முன் நடத்திய நான்கு கூட்டங்களிலும் பாதுக்காப்பு இல்லாத போது மக்களை காப்பது தலைவரின் கடமை, பொதுக்கூட்டங்களில் கவனமாக செயல்ப்பட்டு இருந்தால் உயிரிழப்புகளை தடுத்து என்று விஜய்க்கு இபிஎஸ் அறிவுரை வழங்கினார்.
இபிஎஸ் கேள்வி:
அரசு உயர் அதிகாரிகளை வைத்து கரூர் துயரம் பற்றி செய்தியாளர் சந்திப்பு நடத்துகிறார்கள். இது ஒரு நபர் ஆணைய விசாரணையை தவறாக வழிநடத்துகின்ற மற்றும் அவமதிக்கும் செயல். தங்கள் துறை சார்ந்த பணியை செயல்படுத்த வேண்டிய துறை செயலாளர்கள், இத்தகைய தவறான செயல்களில் ஈடுபடும் போது, நீங்கள் அரசியல்வாதிகள் அல்ல என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். செய்தியாளர் சந்திப்பு நடத்தும் செந்தில் பாலாஜி முகத்தில், சொல்லில் பயம் தெரிகிறது. ஏன் இந்த பயம்? பதற்றம்? மடியில் கனமில்லை என்றால் வழியில் பயம் எதற்கு? இவ்வளவு நடந்தும், திருந்திய பாடில்லை என்பதே அவரது அரசின் செயல்பாடுகள் உணர்த்துகின்றன என்று இபிஎஸ் கேள்வி எழுப்பி இருந்தார்.