சிலிண்டர் தட்டுப்பாடு.. அம்மா உணவங்கள் தடையின்றி செயல்பட நடவடிக்கை எடுத்திடுக- இபிஎஸ்
ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, அம்மா உணவகங்களை மேலும் முழுவீச்சில் இயங்கவைத்து, எவ்வித தடையுமின்றி தொடர்ந்து உணவு வழங்கப்படுவதை உறுதிசெய்ய இபிஎஸ் கோரிக்கைவிடுத்துள்ளார்.

ஈரான் போர்- எரிவாயு தட்டுப்பாடு
ஈரான்- இஸ்ரேல் போர் காரணமாக வளைகுடா நாட்டில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து விமான போக்குவரத்து முற்றிலும் தடை பட்டுள்ளது. மேலும் வளைகுடா நாடுகளில் இருந்து தான் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதையடுத்து கச்சா எண்ணெய் இந்தாவிற்கு வருவது தடைப்பட்டுள்ளது. இதனால் எரிவாயு உற்பத்தி செய்வதில் சிக்கல் உருவாகியுள்ளது. இதனையடுத்து இந்தியாவில் பல்வேறு நகரங்களில் வணிக எரிவாயு கிடைக்காத காரணத்தால் ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளது.
வணிக நிறுவனங்கள் பாதிப்பு
தமிழகத்திலும் பல்வேறு ஓட்டல்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து மாற்று ஏற்பாடுகளை செய்ய எண்ணெய் நிறுவனங்கள் கேட்டுக்கொண்டுள்ளது. இந்தநிலையில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரான்- இஸ்ரேல் , வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக பெட்ரோலிய பொருட்களை இந்தியாவுக்கு கொண்டுவருவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக வணிக மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகத்தைத் தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
LPG-க்கு மாற்றாக வேறு எரிபொருளை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே சில மாவட்டங்களில் சிலிண்டர்கள் கிடைக்காததால் உணவகங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினை மேலும் தீவிரமடையாமல் இருக்க, உரிய நடவடிக்கைகளை எடுத்து , தக்க நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.
அம்மா உணவகங்கள் செயல்பட நடவடிக்கை எடுங்க..
அதேபோல், மக்களிடையே இதை வைத்து தேவையற்ற அச்ச உணர்வை ஏற்படுத்தும் வேலைகளை விடுத்து, தமிழகத்தில் உணவகங்கள் தொடர்ந்து இயங்குவதற்கான எரிவாயு ஏற்பாடுகள் மற்றும் சலுகைகளை பொறுப்புள்ள மாநில அரசாக செய்து தர வேண்டும் எனவும், ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, அம்மா உணவகங்களை மேலும் முழுவீச்சில் இயங்கவைத்து, எவ்வித தடையுமின்றி தொடர்ந்து உணவு வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் திமுக அரசை வலியுறுத்துவதாக அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.























