தமிழ்நாட்டின் அமைதி நிலை திரும்ப திமுக ஆட்சியை முடிவு கட்ட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

இதுதொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர், “தமிழகத்தில் உள்ள திருப்பூரில் பயங்கரவாதச் சதித்திட்டம் தீட்டிய 8 தீவிரவாதிகளை டெல்லி போலீசார் கைது செய்துள்ளதாக செய்திக்ள் வருகின்றன. கொலை, கொள்ளை என்பதையெல்லாம் தாண்டி, தீவிரவாதத் தாக்குதல் எனும் கொடூர உச்சத்திற்கு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து வைத்திருக்கிறது இன்றைய ஸ்டாலின் மாடல் விடியா திமுக அரசு. ஏற்கனவே 2022-ல் கோவையில் கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்த போது, தமிழ்நாட்டில் தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதை ஒப்புக்கொள்ளாமல், "சிலிண்டர் வெடிப்பு" என சமாளிக்கவே முயன்றது.

தொடர்ந்து தீவிரவாதிகள் கைது என்பது தமிழகத்தில் மத்திய அரசின் NIA போன்ற அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இங்குள்ள மாநில அரசு இதனைத் தடுக்க என்ன செய்தது? டெல்லி போலீசார் வந்து கைது செய்யும் வரை திமுக அரசின் ATS (Anti Terrorism Squad) என்ன செய்துகொண்டு இருந்தது? இந்த கையாலாகாத ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியைத் தொடர விட்டால், 1998 போல மீண்டும் ஒரு கோரச் சம்பவத்திற்கு கூட வழிவகுத்துவிடுமோ என்ற அச்சம் தான் மக்களிடையே இருக்கிறது. எனவே, தமிழ்நாட்டின் அமைதி நிலை திரும்ப, இந்த திமுக ஆட்சியை முடிவுகட்ட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டத்தில் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக பதிவுகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 8 செல்போன்கள் மற்றும் 16 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. திருப்பூர் மாவட்டத்தில் ஊத்துக்குளியில் 2 பேரும், பல்லடத்தில் 3 பேர், திருமுருகன்பூண்டியில் ஒருவர் என 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.  

கைது செய்யப்பட்ட முகமது உஜ்ஜல், முகமது ஷாகித், முகமது லிடான். உமர், முகமது ஷாபாட், மிஜானூர் ரஹ்மான் ஆகிய 6 பேரும் திருப்பூரில் பனியன் கம்பெனியில் பணியாற்றி வந்துள்ளனர். பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு திருப்பூரில் இருந்து ஆதரவு பதிவுகள் வெளியாவதாக மத்திய உளவுப்பிரிவு போலீசார் கண்டுபிடித்து நடத்திய தேடுதல் வேட்டையில் இந்த 6 பேரும் சிக்கியுள்ளனர்.

டெல்லி கியூ பிரிவு போலீசார் திருப்பூர் மாநகர, மாவட்ட காவல்துறையுடன் இணைந்து நடத்திய விசாரணையில் இவர்கள் 6 பேரும் கண்டுபிடிக்கப்பட்டனர். இவர்களுக்கும், தீவிரவாத அமைப்புகளுக்கும் எவ்வித தொடர்பு, எத்தனை மாதங்களாக பதிவு வெளியிட்டு வருகின்றனர் என பல கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தைச் சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.