சென்னை நுங்கம்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக குடும்பத்தோடும் குழந்தைகளோடும் கைதுசெய்ததையும், அடிப்படைவசதிகள் கூட இல்லாமல் ஆசிரியர் குடும்பங்களை அடைத்து வைத்திருப்பதையும் , வன்மையாக கண்டிக்கிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் (டிபிஐ) டெட் ஆசிரியர்கள் சங்கம், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் மற்றும் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம்,  ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் ஆகிய 4 ஆசிரியர் சங்கங்கள், 3 வெவ்வேறு விதமான கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு வார காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில் டெட் ஆசிரியர்கள் சங்கம் சார்பில், 2013ஆம் ஆண்டு டெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு, போட்டித் தேர்வில் தேர்ச்சி பெறுவதை ரத்து செய்ய வேண்டும். 2019ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட அரசாணை எண் 149ஐ ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர்களுக்கு உடனடியாகப் பணி நியமனம் அளிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. 


மேலும் திமுக தேர்தல் வாக்குறுதி 181-ன்படி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம்,  ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு போராட்டம் நடைபெற்று வந்தது.  ஆசிரியர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றும் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் கேட்கப்பட்டது. ஆனால் போராட்டம் தொடர்ந்ததால் இன்று காலை போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.  






ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவில், “எதிர்கட்சியாக இருக்கும்பொழுது ஒரு பேச்சு, ஆளும் கட்சியான பிறகு மற்றொரு பேச்சு என்ற கொள்கையை கொண்டிருக்கும் முதல்வர், பல்வேறு பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சியை பிடித்த நீங்கள், 2021ம் ஆண்டு தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது திமுக வெளியிட்ட 311-வது மற்றும் 181 ஆம் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி கடந்த 9 நாட்களாக அமைதியான ஜனநாயக முறையில் பகுதி நேர சிறப்பாசிரியர்கள், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம் மற்றும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போராடி வருகின்றனர், அவர்கள் போராட்டத்தில் வைக்கப்பபட்ட நீங்கள் கொடுத்த 311 மற்றும் 181வது வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை கூட முழுமையாக பரிசீலிக்காமல் வலுக்கட்டாயமாக குடும்பத்தோடும் குழந்தைகளோடும் கைதுசெய்ததையும், அடிப்படைவசதிகள் கூட இல்லாமல் ஆசிரியர் குடும்பங்களை அடைத்து வைத்திருப்பதையும் , வன்மையாக கண்டிக்கிறேன். 100 சதவீதம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டேன் என்று பொய்யை சிறு தயக்கம் கூட இல்லாமல் மக்களிடம் கூறி ஏமாற்ற முயற்சிக்கும் விடியா திமுக முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களே, கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்வதுடன், ஆசிரியர்களுக்கு தாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்துகிறேன்”  என குறிப்பிட்டுள்ளார்.