நாமக்கல் சம்பவம்.. 7 வயது சிறுமிக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சி.. இபிஎஸ், டிடிவி தினகரன் விமர்சனம்!
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் கொடூர சம்பவம்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் பேக்கரியில் வேலை செய்து வரும் தொழிலாளி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரின் 7 வயது மகள் நேற்று முன்தினம் (மார்ச் 7) இரவு வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது மாயமானார். அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் சிறுமியைக் காணவில்லை. சிறிது நேரத்தில் அழுதுக்கொண்டே அந்த சிறுமி மீண்டும் வீட்டுப்பக்கம் வந்துள்ளார். அப்போது சிறுமியின் ஆடையில் இரத்தக்கறை இருப்பதைக் கண்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் மருத்துவர்கள் பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கிய போலீசார் சிறுமி வீட்டு அருகே இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர் ஒருவர் சிறுமியை தூக்கிச் செல்லும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. தீவிர விசாரணையில் அந்த இளைஞர் மணிகண்டன் என்பது கண்டறியப்பட்டது. இந்த நிலையில் சின்னப்ப நாயக்கன் பாளையம் பகுதியில் மணிகண்டனை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம்
இந்த நிலையில் நாமக்கலில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு , உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க பட்டுள்ளதாக, உலகமகளிர்தினத்தன்று, அதிர்ச்சி அளிக்கும் செய்தி வந்துள்ளது. ஸ்டாலின் அரசின் ஒட்டுமொத்த நிர்வாகச் சீர்கேட்டால், சிறுமி முதல் மூதாட்டி வரை யாருக்கும் எங்கும் பாதுகாப்பு இல்லை. இப்படி ஒரு கேவலமான ஆட்சிக்கு பொறுப்பான நீங்கள், எந்த முகத்தை வைத்துக் கொண்டு மக்களிடம் இன்னொரு முறை ஆட்சி செய்ய கேட்கிறீர்கள்ஒரு 7 வயது சிறுமிக்கு தெருவில் பாதுகாப்பு இல்லாத ஆட்சிக்கு, "வெல்லும் தமிழ்ப் பெண்கள்" என்ற வெற்று விளம்பரம் ஒரு கேடா? . இந்த வழக்கில் குற்றவாளி மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவும் , அப்பச்சிளம் குழந்தைக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரனின் கண்டன பதிவு
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட 7 வயது சிறுமி - பெண்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கிய முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின், பெண் இனத்தின் காவலர் வேஷம் போடுவது வெட்கக் கேடானது. உலகமே மகளிர் தினத்தைக் கொண்டாடி வரும் நிலையில் நாமக்கல்லில் ஏழு வயது சிறுமிக்கு நடந்தேறியிருக்கும் இந்த கொடுமையான நிகழ்வு தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு எந்த நிலையில் உள்ளது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
தமிழகத்தில் பெண்களுக்கு வீட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் என எங்குமே பாதுகாப்பில்லாத சூழலை உருவாக்கிவிட்டு, பெண்ணுரிமை பேசுவதும், பெண் இனத்தின் காவலர் போல முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின், தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வது வெட்கக் கேடானது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















