தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் இருந்து, பல்வேறு முக்கிய ஆவணங்கள் அடங்கிய 18 ஹார்ட் டிஸ்குகள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு, மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் விளக்கமளித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசமி, இவ்விவகாரம் தொடர்பாக ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் அவர் என்ன கூறியுள்ளார் என்பதை பார்க்கலாம்.

Continues below advertisement

“யாரையோ காப்பாற்றும் சதி இருக்கிறது“

இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், “மின்துறை தலைமை அலுவலகத்தில் முக்கிய விவரங்கள் அடங்கிய 18 Hard Disk-கள் காணவில்லை என செய்திகள் வருகின்றன.

தூயசக்தி என்று சொல்லிக்கொள்ளும் ஆட்சியில் டெண்டர் தொடர்பான தரவுகள் காணாமல் போயிருப்பதை என்னவென்று எடுத்துக்கொள்ள வேண்டும்?

Continues below advertisement

நடு இரவில் திருடர்கள் வந்து திருட , இது என்ன மந்தையில் இருக்கும் ஆடா? கண்டிப்பாக இந்த திருட்டில் ஏதோ ஒரு உள்நோக்கம், யாரையோ காப்பாற்றும் சதி இருக்கிறது என உறுதியாக சொல்லலாம்.

தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி?

Hard Disk திருட்டு குறித்து முறையான CBI விசாரணை நடத்தப்பட்டு , உண்மை வெளிவர வேண்டும்!“ என கூறியுள்ளார்.

மின்துறை தலைமை அலுவலகத்தில் திருடப்பட்ட 18 ஹார்ட் டிஸ்குகள்

சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில், ஆதாரங்களை அழிக்கும் முயற்சியாக, குறைந்தது 18 ஹார்ட் டிஸ்குகள் திருடப்பட்டு இருக்கும் அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அவற்றில், டெண்டர், கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணை தொடர்பான ரகசிய தகவல்கள் அங்கி இருப்பதாக கூறப்படுகிறது. நிலக்கரி கொள்முதல் தொடர்பான தரவுகளை திருடுவதே இந்த நடவடிக்கையின் முக்கிய குறிக்கோளாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. காகிதம் அடிப்படையிலான நகல்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருந்தாலும், அனைத்து முக்கியமான மின் ஆவணங்களும் திருடப்பட்டுள்ளன.

வார இறுதியான கடந்த மே மாதம் 16-17 தேதிகளில், அலுவலகத்தில் குறைந்த ஊழியர்கள் இருந்த நேரத்தில், இந்த திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக, புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர் நிர்மல் குமார் அந்த அலுவகலத்திற்கு நேரில் சென்று, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்த பிறகு, இந்த திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த மாதம் 20-ம் தேதி, வேறு பிரிவைச் சேர்ந்த ஊழியர்கள், தங்களது கணினிகளிலிருந்து திட்ட கோப்புகள் மற்றும் அதிகாரப்பூர்வ ஆவணங்கள் காணாமல் போனதை கண்டறிந்த நிலையில், இந்த ஒட்டுமொத்த திருட்டு சம்பவம் அம்பலமாகியுள்ளது. இதையடுத்து நடைபெற்ற ஆய்வில், ஒட்டுமொத்தமாக 18 ஹார்ட் டிஸ்குகள் திருடுபோனது தெரியவந்துள்ளது.

அமைச்சர் நிர்மல் குமார் கூறுவது என்ன.?

இவ்விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மின்துறை அமைச்சர் நிர்மல் குமார், மின்துறை தலைமை அலுவலகத்தின் முக்கியமான துறைகளில் இருந்த ஒருசில ஹார்டு டிஸ்குகள் திருடப்பட்டுள்ளதாகவும், கடந்த 5 ஆண்டு கால ஒப்பந்தங்கள் குறித்த ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன என்றும் கூறினார்.

ஒப்பந்த தொழிலாளர்களின் நியமனம் தொடர்பான ஆவணங்களையும் காணவில்லை என்றும், இதுதொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார். இந்த திருட்டின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என முழுமையான விசாரணைக்கு முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும், கடந்த மாதம் சிலரை பணியிடை நீக்கம் செய்த நிலையில், அதன்பிறகு இது நடந்ததா என சந்தேகம் எழுவதாகவும், இந்த விவகாரத்தில் யாரும் தப்பிக்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.