ஈபிஎஸ் பரப்புரை:


ஈரோடு கிழக்குத் தொகுதி இடைதேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர், தென்னரசுவை ஆதரித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,  ”ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வெற்றி நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். 2014ம் ஆண்டு ஏற்காடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதால்,  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியபடி 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் முழுமையாக வெற்றி பெற்றோம் அதே போல் அதிமுக வேட்பாளர் தென்னரசு ஈரோடு கிழக்குத் தொகுதி இடைதேர்தலில் வெற்றி பெற்றால், 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.


விசைத்தறி ஊழியர்கள் பாதிப்பு


திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பு ஏற்று 21மாதங்களில் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை. எங்கே பார்த்தாலும் ரவுடிசம், கட்ட பஞ்சாயத்து, மது விற்பனை நிகழ்ந்து வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி ஜவுளி தொழில் நிறைந்ததாக இருப்பதால், ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆண்டு தோறும் இலவச வேட்டி மற்றும் புடவை வழங்கப்பட்டது. இதனால் விசைத்தறி உற்பத்தியாளர்கள் தொழில் மற்றும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் உயர்ந்தது .ஆனால் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன் இலவச வேட்டி, சேலை ஆணையை வழங்கவில்லை. இதனால் விசைத்தறி கூடங்கள் வேலையிழந்து மூடப்பட்டுள்ளதால், அதுசார்ந்த தொழிலாளர்கள் மாற்று தொழிலுக்கு சென்று விட்டார்கள். இதனால் விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து வருவதாக வாக்காளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.


”முதலமைச்சர் ஸ்டாலின் தான் இதில் தான் சூப்பர்”


கலெக்ஷன், கரப்பசன் மற்றும் கமிஷன் தானில் சூப்பர் முதல்வர் என ஸ்டாலின் பெயர் பெற்றுள்ளார். அதிக நிதி யார் கொடுக்கிறார்களோ அவர்கள் தான் சிறந்த அமைச்சர். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற வேண்டும். ஆட்சி மாறினால் காட்சி மாறும் என்பதை அரசு அதிகாரிகள் நினைவில் கொள்ள வேண்டும். திமுக அமைச்சர்களுக்கு காய்ச்சல் வந்து விட்டது. தேர்தல் பரப்புரை செய்யும் அமைச்சர்கள் அங்கே கிடா விருந்து போட்டு வருகின்றார்கள். திமுகவினர் பணம் கொடுத்தால் வாங்கி கொள்ளுங்கள். அது உங்கள் பணம் தான். ஸ்டாலின் தமிழகத்தினை சீர்குலைத்து வருகிறார். அதிமுக பெற்று எடுத்து குழந்தைக்கு திமுக பெயர் மட்டுமே சூட்டி வரும் நிலை உள்ளது. பேனா நினைவு சின்னம் வைப்பதை எல்லா மக்களும் எதிர்க்கும் நிலையில், அதனை திமுக கலைஞர் மணிமண்டபம் முன்பு வைக்கலாமே! கடலில் தான் வைக்க வேண்டுமா? மக்கள் வரிப்பணம் போவதை சிந்தித்து பார்க்க வேண்டும்.


”குடும்ப ஆட்சி முடிவடைய வேண்டும்”


திமுக பொங்கல் தொகுப்பு முறையாக வழங்கவில்லை. திமுகவினர் கொடுக்கும் பணத்தை வாங்கி கொண்டு அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன். திமுக 21மாத ஆட்சியில் ஈரோடு கிழக்கு தொகுதியில் செய்த திட்டத்தை பட்டியலிட திமுக தாயாரா? ஸ்டாலினும், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சரும் நடைபயிற்சி மேற்கொண்ட போது, மகன் உதயநிதி ஸ்டாலின்  நடித்த படத்தைப் பற்றி பேசி வரும் நிலையில் மக்களுக்கு எப்படி நன்மைகள் கிடைக்கும். குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்டும் வகையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அமைய வேண்டும்.


”திரையுலகில் உதயநிதி”


உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவி அடி மாட்டு விலைக்கு படத்தை வாங்கி படம் வெளியீடு வேலையை செய்து வருகிறார்கள். இதனால் திரையுலகம் முடியும் சூழல் ஏற்பட்டுள்ளது. மின்கட்டண உயர்வை பார்த்தாலே மக்களுக்கு சாக் அடிக்கும் நிலையில் உள்ளது. சொத்து வரி உயர்வு மேலும் மக்களை கடுமையாக பாதித்துள்ளது. இதனால் குடியிருப்பு வாடகை கட்டணமும் உயர்ந்துள்ளது. ஏழை மக்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.


வாக்குறுதிகள் என்னாயிற்று?


திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமலுக்கு கொண்டு வருவது உள்ளிட்ட 520அறிவிப்புகள் வெளியிட்ட நிலையில், அவற்றில் 85 சதவிகிதத்தை நிறைவேற்றி விட்டதாக ஸ்டாலின் சொன்னது பச்சை பொய். குடும்ப தலைவிக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் என்கிற திமுக வாக்குறுதியை திமுக அமைச்சர்கள் வந்தால் கேட்டு வாங்குங்கள். திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன் நீட் ரத்து வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை என கேள்வி எழுப்பினார். இனியும் திமுக மக்களை ஏமாற்ற கூடாது என்பதற்கு, இடைத்தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்” என எடப்பாடி பழனிசாமி வாக்காளர்களை கேட்டுக்கொண்டார்.