அமைச்சர் செந்தில்பாலாஜியின் நண்பர்கள் வீட்டில் ED ரெய்டு - கரூரில் பரபரப்பு
கரூரில் மூன்று இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைகள் ஈடுபட்டு வருகின்றனர்.

கரூரில் தற்போது அரசு ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் மாவட்டத்தில் மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருங்கிய நண்பர்கள், அரசு ஒப்பந்ததாரர் வீடு உள்ளிட்ட மூன்று இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக அமைச்சர் நெருங்கிய நண்பரும் அரசு ஒப்பந்ததாரருமான எம்.சிஎஸ் சங்கர் ஆனந்த் வீடு, மற்றும் ராயனூர் பகுதியில் அமைந்துள்ள கொங்கு மெஸ் மணி என்பவர் வீடு, கோதை நகர் பகுதியில் அமைந்துள்ள சக்தி மெஸ் கார்த்தி என்பவர் வீடு உள்ளிட்ட மூன்று இடங்களில் தற்பொழுது கேரள மாநிலத்தைச் சார்ந்த அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மூன்று இடங்களில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎஃப் வீரர்கள் துணையோடு தற்போது சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது அரசு ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த் மற்றும் கொங்கு மெஸ் மணி ஆகியரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேரில் பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2023 ஆண்டு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது தொடர் சோதனையாக நடைபெற்று வருகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் சாட்சிகளை விசாரிக்கலாம் என நீதிமன்றம் கூறியுள்ள நிலையில், தற்போது சோதனை நடைபெற்று வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.