சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது 120 பக்க குற்றபத்திரிகையும் 3,200 பக்க ஆவணங்களையும் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது.


3000 பக்க குற்றபத்திரிகை:


அமைச்சர் செந்தில் பாலாஜியை பண மோசடி வழக்கில் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு கொடுக்கப்பட்டிருந்த 5 நாட்கள் விசாரணை காவல் இன்றுடன் முடிவடைந்தது. இந்த சூழலில், காவலை நீட்டிக்கக் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


அதேபோல, 120 பக்க குற்றப்பத்திரிகையும் 3,200 பக்க ஆவணங்களையும் அமலாக்கத்துறை இன்று தாக்கல் செய்தது. அனைத்து ஆவணங்களும் இரும்பு பெட்டியில் வைத்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


இதை தொடர்ந்து, இன்றைய விசாரணயில், விசாரணை காவலை நீட்டிக்கக் கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை நிராகரித்த சென்னை முதன்மை நீதிமன்றம், ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது. வழக்கில் குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அடுத்த வாரத்தில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்ய இருப்பதாக அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செந்தில் பாலாஜி கைது விவகாரம்:


அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாகச் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் உயர்நீதிமன்ற அனுமதியோடு சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டு அங்கு மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். 


செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் இருப்பதாக அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.


இதையடுத்து, இந்த வழக்கில் மூன்றாவது நீதிபதி சி.வி. கார்த்திகேயன் தீர்ப்பளிக்கையில், “இரண்டு நீதிபதிகள் அமர்வில் பரத சக்கரவர்த்தி கூறிய கருத்துடன் உடன்படுகிறேன்” எனத் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா ஆகியோர் மேல்முறையீடு செய்திருந்தனர்.


விசாரணை பிடியில் செந்தில்பாலாஜி:


செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன் அடிப்படையிலேயே செந்தில் பாலாஜியை 5 நாட்கள் விசாரணைக் காவலில் எடுத்து விசாரிக்க, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை அமலாக்கத் துறை நாடியது. இந்த விசாரணைக்காக, செந்தில் பாலாஜி காணொலி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார். 



அப்போது, அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்கும் நாட்களில், ஒரு நாளைக்கு இருமுறை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஆனால்,  5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ள நிலையில் இதுதொடர்பாக வேறு எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க அனுமதிப்பதாகவும்,  5 நாட்கள் காவல் முடிவடைந்ததும் செந்தில் பாலாஜியை 12ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.