Thiruvanmiyur to Uthandi Elevated Corridor: சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் (ECR) திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை சுமார் 13 கிலோமீட்டர் தொலைவிற்கு திட்டமிடப்பட்டிருந்த ரூ.2,100 கோடி மதிப்பிலான மேம்பாலச் சாலைத் திட்டம் (Elevated Corridor Project) கைவிடப்படும் சூழல் உருவாகியுள்ளது. நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் தாக்கல் செய்த நடப்பு நிதியாண்டிற்கான கொள்கைக் குறிப்பில் இத்திட்டம் பற்றிய தகவல்கள் விடுபட்டுள்ளது இந்த முடிவை வெளிப்படுத்தியுள்ளது.

Continues below advertisement

கொள்கைக் குறிப்பில் விடுபட்ட திட்டம்

நெடுஞ்சாலைத் துறை வெளியிட்டுள்ள கொள்கைக் குறிப்பில், கடந்த காலங்களில் அறிவிக்கப்பட்டு நிலுவையில் உள்ள மற்றும் தொடரப்படும் திட்டங்களின் பட்டியலில் இந்த வான்வழி மேம்பாலத் திட்டம் இடம்பெறவில்லை. அண்ணா சாலையில் அமைக்கப்பட்டு வரும் ரூ.621 கோடி மதிப்பிலான மேம்பாலம், சென்னை வெளிவட்டச் சாலைத் திட்டம், சென்னை-கன்னியாகுமரி தொழில்வழித்தடத் திட்டம் மற்றும் ஆவடி, குன்றத்தூர், கொரட்டூர், வானகரம் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பலமட்டப் பாலம் கட்டும் பணிகள் போன்ற அனைத்து நிலுவை திட்டங்களும் கொள்கைக் குறிப்பில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், கிழக்குக் கடற்கரைச் சாலை மேம்பாலத் திட்டம் விடுபட்டுள்ளது, இத்திட்டம் கைவிடப்படுவதற்கான தெளிவான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.

தற்காலிகப் பணி நிறுத்தம் மற்றும் நிபுணர் குழு

கொள்கைக் குறிப்பில் ஒரு திட்டம் இடம்பெறவில்லை என்றால், அது மீண்டும் தொடங்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தை மதிப்பீடு செய்து பரிசீலிப்பதற்காக அரசு சார்பில் நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்ட போதிலும், அதற்கான உறுப்பினர்கள் இன்னும் முறைப்படி நியமிக்கப்படவில்லை. அதே நேரத்தில், இத்திட்டத்திற்கான கட்டுமானப் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு ஏற்கனவே உத்தியோகபூர்வ அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது.

Continues below advertisement

அரசியல் பின்னணி மற்றும் திட்ட மாதிரியின் சிக்கல்கள்

முதலமைச்சர் விஜய் கரூரில் பேசுகையில், சென்னையில் உள்ள நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு வழக்கமான செலவை விட இருமடங்கு அதிக தொகையில் டெண்டர் கோரப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டினார். இந்த விமர்சனங்களைத் தொடர்ந்து, இத்திட்டம் உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டது. ஹைபிரிட் ஆனுவிட்டி முறையில் (HAM) செயல்படுத்தப்படவிருந்த இத்திட்டத்தில், மொத்த செலவில் 60 சதவீதத்தை ஒப்பந்ததாரரும், எஞ்சிய 40 சதவீதத்தை அரசு நிதியாகவும் செலுத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.

இத்திட்டத்திற்காக ஒப்பந்ததாரர் வங்கிகளில் பெரும்தொகையைக் கடனாகப் பெற்று, கட்டுமான இயந்திரங்களையும் களத்தில் இறக்கியுள்ளார். தற்போது திட்டம் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதால், சர்வதேச அளவிலான அல்லது சட்டரீதியான நஷ்டஈட்டுப் பிரச்சினைகள் (Arbitration) எழும் என்று அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை வந்த பிறகே அடுத்தகட்ட முடிவுகள் தெரியவரும்.

கடல்வழிச் சாலைத் திட்டம் மற்றும் அரசின் வெள்ளை அறிக்கை

சென்னை முதல் புதுச்சேரி வரை புதிய கடல்வழிச் இணைப்புச் சாலைத் திட்டத்தை (Sea-link corridor) அரசு ஏற்கனவே அறிவித்துள்ளதால், திருவான்மியூர் - உத்தண்டி வரையிலான சிறிய அளவிலான இந்த பாதை இனி தேவையில்லை என்றும் அதிகாரிகள் கருதுகின்றனர். இதனிடையே, நெடுஞ்சாலைத் துறை சார்பில் விரைவில் வெள்ளை அறிக்கை ஒன்று வெளியிடப்படும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். முந்தைய அரசின் காலத்தில் கொண்டுவரப்பட்ட 20 திட்டங்களுக்கு மீண்டும் மறுடெண்டர் விடப்பட்டதில், திட்ட மதிப்பீட்டை விட 20% முதல் 36% வரை குறைந்த தொகையில் ஒப்பந்தப் புள்ளிகள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சென்னை கிழக்கு கடற்கரை சாலையின், கனவு திட்டம் கைவிடப்படும் சூழல் உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.