ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதுக்குறித்த அறிவிப்பு தமிழக வரலாற்றில் ஒரு மைல் கல் என்று புகழாரம் சூட்டிய பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், தமிழக முதல்வருக்கு கடிதத்தின் வாயிலாக நன்றியைத் தெரிவித்துள்ளார்.


அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு, பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்வதற்கான வழிமுறைகளை வகுத்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் படி, தமிழக சிறைகளில் உள்ள ஆயுள் தண்டனைக் கைதிகள், வயது முதிர்ந்த சிறை கைதிகள்  மற்றும்  பல்வேறு இணை நோய்கள் உள்ள உடல் நலம் குன்றிய சிறை கைதிகள், தீராத நோயுற்ற மற்றும் மனநலம் குன்றிய சிறை கைதிகள் மற்றும் மாற்றுத் திறனாளி சிறை கைதி ஆகியோரை மனிதாபிமானம் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் 6 பேர் கொண்டக் குழுவை தமிழக அரசு அறிவித்துள்ளது. இக்குழுவில், மனநல மருத்துவ இயக்குநர், மருத்துவக் கல்வி இயக்குநர், சிறைத் துறைத் தலைமை நன்னடத்தை அலுவலர், உளவியலாளர், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற மூத்த வழக்குரைஞர் என ஐந்து உறுப்பினர்களும், சிறை மற்றும் சீர்திருத்தத் துறையில் துணைத் தலைவர் பதவி நிலையில் உள்ள அலுவலர் ஒருவர் உறுப்பினர் செயலராகவும் அங்கம் வகிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





மேலும் இந்தக் குழு தெரிவிக்கும் பரிந்துரையின் படி, விரைவில் ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் எனக்கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான அறிவிப்பிற்கு,  பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நன்றியைத்தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அற்புதம்மாள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில், ஆயுள் சிறைக்கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதுக்குறித்த அறிவிப்பு தமிழக வரலாற்றில் ஒரு மைல் கல் என்று புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் சிறையில் உள்ள ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள பரிந்துரைக்குழு, முதல்வரின் மனித நேயத்தை வெளிப்படுத்துகிறது எனவும், 31 ஆண்டாக சிறைவாசிகள் படும் துன்பங்கள் அனைத்தும் நன்கு தெரியும் என்பதால் தான் இத்தகைய முடிவை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். எனவே இதற்கு என்னுடைய அன்புக்கலந்த நன்றி என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.





முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளனை விடுவிக்க, அற்புதம்மாள்  பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், தமிழக முதல்வரின் அறிவிப்பு  பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.