அடுக்குமாடி வீடுகள் கட்டுவதற்கும் , வீட்டு மனை பிரிவுக்கு அனுமதியும் வழங்கக்கூடிய மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம் சேலம் சூரமங்கலம் அருகே சுப்பிரமணிய நகரில் உள்ளது. இந்த அலுவலகத்தில் உதவி இயக்குனராக உள்ளவர் ராணி. இந்த நிலையில் இந்த அலுவலகத்தில் நேற்று மாலை 4 மணியிலிருந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். வீட்டு மனைகள் பிரிப்புக்கு அனுமதி வழங்குவதற்கும் லஞ்சம் வாங்குவதாக எழுந்த தகவலின் அடிப்படையிலும், தீபாவளி நெருங்குவதை ஒட்டி தீபாவளி இனாம் பெறுவதாக எழுந்த புகாரின் பேரிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். 4 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த சோதனையில் பல ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. மேலும் உதவி இயக்குனரின் ஓட்டுனர் கிருஷ்ணன் என்பவரிடமிருந்து 5,300 ரூபாயும், சிவில் இன்ஜினியர் மவுலீஸ்வரன் என்பவரிடம் இருந்து 4,000 ரூபாயும், ஓட்டுனராக இருக்கும் வெங்கடேஷ் என்பவரிடமிருந்து ரூபாய் 16 ஆயிரம் என 25,000 ரூபாய் பறிமுதல் செய்தனர்.



இதேபோன்று நாமக்கல் மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறையின் கோட்ட பொறியாளா், உதவி கோட்ட பொறியாளா் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நேற்று நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.8.87 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. நாமக்கல் - மோகனூா் சாலையில், மாநில நெடுஞ்சாலைத் துறையின் கோட்ட பொறியாளா் அலுவலகமும், அதன் பின்புறத்தில் உதவி கோட்ட பொறியாளா் அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சாலை அமைக்கும் பணியை ஒப்பந்தம் எடுத்துள்ள ஒப்பந்ததாரா்களிடம் இரு அலுவலகங்களிலும் உள்ள அதிகாரிகளும், இதர பணியாளா்களும் பட்டியலிட்டு லட்சக்கணக்கில் பணம் வசூலித்து வருவதாக, நாமக்கல் லஞ்ச ஒழிப்புத் துறை துணை கண்காணிப்பாளருக்கு புகாா் வந்துள்ளது. இதனைத் தொடா்ந்து, அவரது தலைமையில் ஆய்வாளா் நல்லம்மாள் மற்றும் 10 க்கும் மேற்பட்ட காவலர்கள் நேற்று மாலை 5 மணியளவில் திடீரென அலுவலகத்துக்குள் சென்றனா்.



அங்குள்ள பணியாளா்கள் வேலையை முடித்துவிட்டு வெளியில் செல்வதற்கு முன், அவா்களை அலுவலகத்திலேயே அமரச் செய்து விசாரணை மேற்கொண்டனா். கோட்டப் பொறியாளா் சந்திரசேகரன், உதவி கோட்டப் பொறியாளா் மாணிக்கம், கண்காணிப்பாளா் கோபாலகிருஷ்ணன் மற்றும் 25 க்கும் மேற்பட்ட பணியாளா்களிடம் விசாரணை நடைபெற்றது. மேலும், அலுவலகம் முழுவதிலும் நடைபெற்ற தீவிர சோதனையில், கணக்கில் வராத ரொக்கம் ரூ. 8.87 லட்சம் கைப்பற்றப்பட்டது.


தமிழ்நாடு முழுவதும் திருவாரூர், நாமக்கல், விருதுநகர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். பத்திரப் பதிவு துறை, ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த் துறை, தொழில்துறை, வட்டார போக்குவரத்துத் துறை, நெடுஞ்சாலைத் துறை, வனத்துறை, வணிக வரித்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், தீயணைப்புத் துறை, நுகர்பொருள் வாணிபக் கழகம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், நகர ஊரமைப்புத் துறை, வேளாண்மைத் துறை, மதுபானம் மற்றும் ஆயத்தீர்வை துறை, மதுவிலக்கு அமலாக்கத் துறை ஆகிய 16 துறை சார்ந்த அரசு அலுவலகங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. தீபாவளி பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு பணம் வசூல் செய்து வருவதாக எழுந்த புகாரின் பேரில், இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில் நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு கோடியே 12 இலட்சத்து 57 ஆயிரத்து 803 ரூபாய் பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.