கேரளாவில் நிபா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கோழிக்கோட்டில் கடந்த மாதம் 30 ஆம் தேதி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 49 வயது  நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேபோல் 10 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 40 வயது நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மனைவி மற்றும் இரண்டு மகன்கள் மற்றும் 10 மாத குழந்தை என அனைவரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக மருத்துவமனை, சுகாதார துறைக்கு தகவல் அளித்த நிலையில் அவர்கள் நிபா வைரஸால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.


அதனை தொடர்ந்து  இறந்த இரண்டு நபர்களின் மருத்துவ பரிசோதனை வெளியானது, அதில் இருவருக்கும் நிபா வைரஸ் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் அவரது குடும்பத்துனரை தனி வார்ட்டிற்கு மாற்றி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுடன் நேரடி தொடர்பு கொண்ட 75 நபர்களின் பட்டியல் சுகாதாரத்துறையினரால் தயாரிக்கப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு் சுகாதாரத்துறையினரின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். மேலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களும், செவிலியர்களும் இந்த பட்டியலில் அடங்குவர்.






கேரளாவில் கோழிக்கோடு பகுதியில் 7 ஊராட்சிகளில் 43 வார்டுகள் நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளாகவும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. நிபா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த அம்மாநில சுகாதாரத்துறை தீவிர தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து அங்கு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருவதாக அம்மாநில முதலமைச்சர் பினராய் விஜயன் குறிப்பிட்டுள்ளார். 


இதைத்தொடர்ந்து கேரளா தமிழகத்தின் அண்டை மாநிலம் என்பதால் நிபா வைரஸ் பாதிப்பு தாக்காமல் இருக்க எல்லை பகுதிகளில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காணிப்பு தீவிரப்படுத்த தமிழ்நாடு சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்த பொது சுகாதார துறை இயக்குனர், மாவட்ட சுகாதார துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். கேரளாவில் இருந்து தமிழ்நாடு வருவோருக்கு காய்ச்சல் இருக்கிறதா என உடல்நல பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவின் அருகே உள்ள புதுவையின் மஹே மாவட்டத்தில், உள்ள பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது.


உலக சுகாதார அமைப்பு (WHO) படி, நிபா வைரஸ் தொற்று ஒரு ஜூனோடிக் நோய். இது விலங்குகளிடமிருந்து மக்களுக்கு பரவுகிறது என்றும், அசுத்தமான உணவு மூலமாகவோ அல்லது நேரடியாக நபரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய் பாதிப்பு கண்டறிய பட்டவர்களிடம் கடுமையான சுவாச நோய் மற்றும் அபாயகரமான மூளையழற்சி வரை பல்வேறு நோய்களால் பாதிக்கப்படலாம் என்றும் சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிபா வைரஸ் இறப்பு விகிதம் சுமார் 70 சதவிகிதம் ஆகும். இதுவரை இந்த வைரஸுக்கு தடுப்பூசி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.