இன்றைய அரசியல் களம் செல்லும் சூழலில் முதலமைச்சர் விஜய் கூட தன் பதவியை ராஜினாமா செய்யலாம் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
நேர்காணல் ஒன்றில் பேசிய அவரிடம், “திமுகவில் கூட்டணியில் இருந்த கட்சிகள் இன்று உங்கள் கட்சியைப் பேசாத நாட்களே இல்லை. திமுக மீது விமர்சனம் வைக்க என்ன காரணம்?” என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஆர்.எஸ்.பாரதி, “இது கவனத்தை திசை திருப்பும் செயலாகும். எங்களுடன் இருக்கும்போது கூட்டணி கட்சிகள் எதிர்க்கட்சியான அதிமுகவை அப்படி பேசியதில்லை. ஆளும் கட்சியில் இருந்து உத்தரவு போவதால் தான் இப்படி பேசுகிறார்கள் என்பது என் கணிப்பாக உள்ளது. தேர்தலுக்குப் பிறகு துரோகம் செய்தவர்களை துரோகிகள் என சொன்னோம். அதன்பிறகு கூட்டணியில் இருந்த கட்சிகளைப் பற்றி நாங்கள் பேசவில்லை.
விஜய் ஆளில்லாத மைதானத்தில் கோல் போட்டதைப் போல தேர்தலில் வெற்றி பெற்று விட்டார். ஒரு வார்த்தைக் கூட நாங்கள் விஜயைப் பற்றி பேசவில்லை. அதுதான் நாங்கள் செய்த தப்பு என்பதை உணர்ந்துள்ளோம். தமிழ்நாட்டு மக்கள் இப்படி ஒரு முடிவோடு இருப்பார்கள் என நினைக்கவில்லை. நாங்கள் கொள்கை எதிரியைப் பற்றி தான் பேசினோம். தவெக ஆட்சியில் 2 மாதங்களில் பல தவறுகள் நடந்து விட்டது.
திமுக தலைவர் ஸ்டாலின் சொன்னது போல 6 மாதம் கால அவகாசம் கொடுக்கலாம் என நினைத்தோம். ஆனால் 2 மாதங்களில் இவ்வளவு தவறுகள் நடந்து விட்டது. திமுக ஆட்சியில் சிறை மரணம் நிகழ்ந்த நிலையில் சாரி மட்டும் கேட்டா போதுமா என சினிமா பாணியில் கிண்டலடித்தார். இப்போது சிறை மரணம் நிகழ்ந்துள்ள நிலையில் முதலமைச்சராக இருக்கும் விஜய் ஒரு ஃபோன் செய்து பேசினாரா?
இதையெல்லாம் நாங்கள் மக்களிடம் கொண்டு சேர்த்து தான் வருகிறோம். 6 மாதங்களுக்கு தேவைப்பட்டால் மட்டுமே போராட்டம் நடத்த வேண்டும் என ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். ஆர்ப்பாட்டம் நடத்தவில்லையே தவிர கனிமொழி நேரில் சென்றிருக்கிறார், கண்டன பதிவுகள் எல்லாம் செய்திருக்கிறோம் என ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
ஆளுநர் என்பவர் மத்திய அரசின் ரப்பர் ஸ்டாம்பு என சொல்லி விட்டு திமுக அவரிடம் சென்று தவெக அரசு மீது புகார் தெரிவிக்கிறாகளே என்ற கேள்வி எழுகிறது. ஆனால் சட்டமன்றத்திற்கு ஆளுநர் தான் தலைவர். அதனால் சட்டமன்ற உறுப்பினர் தொடர்பாக விவகாரத்தை ஆளுநரிடம் புகாரளித்தோம். அதன்பிறகு அதில் நடவடிக்கை இல்லை என்றால் நீதிமன்றம் செல்லலாம். எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்தில் கூட நாங்கள் ஆளுநரிடம் தான் புகார் கொடுத்தோம்.
Also Read: பழனி நில மோசடி விவகாரம்.. சிக்கிய திமுக பிரபலம்.. தமிழ்நாடு முழுக்க ரெய்டு.. பரபரப்பு தகவல்கள்!
அதேசமயம் முதலமைச்சர் ஸ்டாலின் 6 மாதத்தில் இந்த ஆட்சி மாற்றம் வரும் என சொல்கிறார். அதற்கு காரணம் தொண்டர்களை உற்சாகப்படுத்துவது மட்டுமல்ல, இன்றைக்கு இருக்கும் சூழலும் தான். எதையும் கணிக்க முடியவில்லை. என்னால் ஆட்சி நடத்த முடியவில்லை என முதலமைச்சர் விஜயே செல்லலாம். எது வேண்டுமானாலும் நடக்கலாம் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
