நாடாளுமன்ற கூட்டத்தொடர் குறித்து விவாதிப்பது தொடர்பாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் ஜூலை 14 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


நாடாளுமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து தேசிய மற்றும் மாநில கட்சிகள் இப்போதே தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அதேபோல் மக்களை கவரும் வகையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு சில திட்டங்களை கொண்டு வரும் முனைப்பில் உள்ளது. இதன் தொடர்ச்சியாக சமீபத்தில் ரயில்களில் ஏசி கோச்சில் சேர் கார் கட்டணம் 25% வரை குறைக்கப்பட்டது. 


இப்படியான நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் ஜூலை 20 ஆம் தேதி தொடங்கும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி  கடந்த ஒரு வாரம் முன்பு அறிவித்தார். இந்த கூட்டத்தொடர் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரில் கொண்டு வரப்படும் சட்டங்கள் மற்றும் பிற பணிகளில் அனைத்துக் கட்சிகளும் பங்களிப்பை அளிக்க வேண்டும் எனவும் பிரகலாத் ஜோஷி கேட்டுக் கொண்டார். 


இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் குறித்து விவாதிக்க ஜூலை 14 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு திமுக எம்.பி.,க்கள் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடக்கும் என கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


கடந்த மே 28 ஆம் தேதி திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் கூடும் முதல் கூட்டத்தொடர் இதுவாகும். ஆனால் சில நாட்கள் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் கூட்டத்தொடர் நடக்கலாம் எனவும் கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக நடக்கும் மழைக்காலத் கூட்டத்தொடர் என்பதால் இந்த முறை பாஜக அரசுக்கு  பெரும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.