நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31-ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. பிப்ரவரி 1-ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒன்றிய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நேற்று தொடங்கியது. இந்தக் அமர்வு வரும் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. மக்களவையில் ரயில்வே துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் இந்த விவாதத்தில் திமுக எம்பி கனிமொழி பேசினார். அதில், “ இந்தியாவில் கட்டமைப்பு சார்ந்த விஷயங்களை அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இந்தாண்டு வெளியாகியுள்ள மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையின்படி ரயில்வே துறையில் ஒரு ருபாய் முதலீடு செய்தால் அது பொருளாதாரத்தில் 5 ரூபாய் அளவிற்கு பயனை தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இத்தகைய முக்கியமான ரயில்வே துறையை மத்திய அரசு நிராகரித்து வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவாக ரயில் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும். கொரோனா காரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனியாக இருந்த கோச்கள் நீக்கப்பட்டுள்ளன. மேலும் இந்தப் பட்ஜெட்டில் தெற்கு மற்றும் வடக்கு ரயில்வேகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகைகளில் பெரியளவில் வித்தியாசம் உள்ளது. அதன்படி தெற்கு ரயில்வேக்கு ரூ.59 கோடி மட்டும், வடக்கு ரயில்வேக்கு ரூ.13,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரே நாடு என்று எப்போதும் குறிப்பிட்டு வரும் மத்திய அரசு ரயில்வே நிதி ஒதுக்கீட்டில் வடக்கு, தெற்கு பாகுபாடு பார்க்கக்கூடாது.


தென்னிந்திய ரயில்வேக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விட வடக்கு ரயில்வே திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் தென்னிந்திய ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மொத்த தொகை வெறும் ரூ.308 கோடி மட்டுமே. லாபத்தில் இயங்கும் ரயில்களை, மத்திய அரசு தனியாருக்குத் தாரைவார்க்கிறது. நஷ்டத்தில் இயங்கும் ரயில்களை மட்டுமே மத்திய அரசு இயக்குகிறது. ரயில்வே துறையில் தென்னிந்தியர்களுக்கு வேலைவாய்ப்புகள் திட்டமிட்டு மறுக்கப்படுகின்றன. ரயில்வே துறையில் சுமார் 2 லட்சத்திற்கு மேலான காலி பணியிடங்கள் உள்ளன. அவை அனைத்தும் நிரப்பி இந்திய இளைஞர்களுக்கு ரயில்வே வேலை வாய்ப்பை தர தவறியுள்ளது. மொழி தெரியாத பணியாளர்களால் மக்களின் உயிருக்கே பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது” எனக் கூறினார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண