Anitha Radhakrishnan Arrest: திமுக-வின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் முதலமைச்சர் விஜய்யைப் பற்றி அவதூறாக பேசியதற்காக இன்று தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டார்.
அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்படும் அளவிற்கு முதலமைச்சர் விஜய் பற்றி என்ன பேசினார்? என்று கீழே விரிவாக காணலாம்.
என்ன பேசினார் அனிதா ராதாகிருஷ்ணன்?
கடந்த மாதம் 20ம் தேதி திமுக-வின் நிகழ்ச்சியில் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன் அந்த கூட்டத்தில் பேசியதாவது,
"நேற்றைய தினம் சட்டமன்றத்தில் முதலில் நடிகன் கட்சியைச் சேர்ந்த அவனை முதலில் பேசச் சொன்னார்கள். அவன் பேசுனான். இரண்டாவது நமது முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசினார். அவரது பேச்சைக் கண்டு உதற ஆரம்பித்துவிட்டார்கள் எதிரிகள்.
சட்டமன்றத்தில் முதலமைச்சர் மூஞ்சை அப்படி தொங்கப்போட்டுவிட்டார். மற்றவர்கள் என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. இன்னைக்கு கவர்னர் உரையிலே இந்தபாடு என்றால்? பட்ஜெட் கூட்டத்தொடர் வரும்போது ஒவ்வொருத்தனும் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓடப்போகிறான் என்று அர்த்தம்.
நடிகையுடன் இணைத்து பேச்சு:
அண்ணன் ஆஸ்டின் பேசும்போது அலறவிட்டார். முதலமைச்சர் மூஞ்சுக்கு நேரா கையை நீட்டி வாயைத் தொறந்து பேசமாட்டியா முதலமைச்சரு? என்று கேட்டார். அவருக்கு ஒன்றும் ஓடவில்லை. நம்மளை கேட்குறதுக்கு இப்டடி வந்துட்டாங்களே? இப்படி வந்து நாம மாட்டிக்கிட்டோமே?
நாம ஜாலியா நடிகையோட வீட்ல ஜாலியா இருந்தோம். நம்மளை கொண்டு மாட்டிவிட்டாங்களே உட்காரவச்சு அப்படினு தவிக்குறாரு. நான் வியாபாரி. ஒரு வியாபாரி கடைக்குள்ள வரும்போதே அவன் கடன் வாங்க வரானா? பணத்தோட வர்றானானு எனக்குத் தெரியும்.
சட்டமன்றத்தில் பார்க்கும்போது ஒரு முதலமைச்சர் முழிக்கும் முழியைப் பார்க்கும்போது அட பாவமே என்னை மாட்டவிட்டுட்டீங்களேடா? அப்படினு அவன் கெஞ்சுற நிலையை நான் உணர முடிந்தது. உதயநிதி ஸ்டாலின் இவன் கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்து பேசுகின்ற பேச்சு மணி, மணியாக இருந்தது. அவன் முழிக்கிறான். ஏன்டா வந்தோம்? இவன் எதிர வந்து முழிக்குறோம்னு.
கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் உள்ளது. முதலமைச்சர் பேசப்போறாரு. முதலமைச்சருக்கு எழுதிக் கொடுத்து இருப்பார்கள்ல. அதையே கஷ்டப்பட்டுதான் வாசிப்பாரு. இதுதான் முதலமைச்சர் கதை.
இவ்வாறு அவர் பேசினார்.
முதலமைச்சரை நடிகையுடன் இணைத்து பேசியதற்காகவும், ஒருமையில் தகாத முறையில் பேசியதற்காகவும் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களில் கொளத்தூர் தொகுதி மக்களை கேடு கெட்ட மக்கள் என்று அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மற்றொரு கூட்டத்தில் முதலமைச்சர் விஜய்யின் குடும்ப விவகாரம் குறித்தும் பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
