சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்த பிறகு திமுக-வில் பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ள மு.க.ஸ்டாலின் முடிவு செய்தார். தவெக மீதான எதிர்பார்ப்பு, விஜய்யின் செல்வாக்கு ஆகியவற்றை தாண்டி திமுக நிர்வாகிகள் பல இடங்களில் முறையாக பணியாற்றாததும் அவர்களின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

Continues below advertisement

மறுசீரமைப்புக்கு தயக்கம்:

இதையடுத்து, கட்சி மறுசீரமைப்புக்குழுவை உருவாக்கினார் மு.க.ஸ்டாலின். இந்த குழு தேர்தல் தோல்விக்கு காரணமான 20 மாவட்டச் செயலாளர்களின் பதவியை பறிக்க பரிந்துரைத்ததுடன், மாவட்டச் செயலாளர்களின் கீழ் உள்ள அதிக தொகுதிகளை குறைக்கவும் பரிந்துரைத்தது. உள்ளாட்சித் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளதால் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள திமுக தலைமை தயக்கம் காட்டி வருகிறது. 

இந்த சூழலில், கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை உதயநிதி ஸ்டாலினிடம் ஒப்படைக்க மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். காவிரி போராட்டத்தின்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட சம்பவத்தில், அவர் விடுவிக்கப்பட்ட பிறகு தஞ்சையில் அவருக்கு கிடைத்த வரவேற்பை திமுக-வினர் பெரியளவில் கொண்டாடி வருகின்றனர். 

Continues below advertisement

செயல் தலைவராகிறாரா உதயநிதி?

இதை திமுக-வினர் தங்களுக்கு சாதகமாக இணையதளத்தில் பகிர்ந்து வரும் சமயத்தில் இந்த விவகாரத்தை பெரியளவில் கொண்டாடி வருகின்றனர். உதயநிதியின் செல்வாக்கை மேலும் உயர்த்தும் வகையில் அவருக்கு முக்கிய பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மு.க.ஸ்டாலின் தற்போது கட்சியின் தலைவராக மட்டும் உள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக உள்ள உதயநிதியை திமுக செயல்தலைவராக நியமிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த தேர்தலில் முறையாக பணியாற்றாத பல சீனியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உதயநிதி முனைப்புடன் உள்ளார். மேலும், அவர்களுக்கு மாற்றாக புதிய நிர்வாகிகளையும் நியமிக்க அவர் ஆர்வம் காட்டி வருகிறார்.

காத்திருக்கும் சம்பவம்:

நடவடிக்கைக்கு பயந்த மூத்த உறுப்பினர்கள் பலரும் மு.க.ஸ்டாலினிடம் தங்கள் பதவியை தக்க வைக்க முறையிட்டு வருகின்றனர். மு.க.ஸ்டாலினும் அவர்களுக்கு ஆறுதல் கூறி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. உதயநிதி செயல் தலைவராக பொறுப்பேற்றால் கட்சியில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

திமுக-வின் எதிர்காலத்தை கருதி உதயநிதியிடம் தலைமைப் பொறுப்பை ஒப்படைக்கவும் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். இனி வரும் தேர்தல்களில் வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை உதயநிதியிடம் ஒப்படைக்கும் வகையில் அவருக்கு பல்வேறு சுதந்திரம் வழங்கவும் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.