டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைப்பது தொடர்பாக திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக உள்பட அரசியல் கட்சி உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.


சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில், டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் நடத்த ஆய்வு மேற்கொள்வது தொடர்பாக  திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சியினர்


அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். தீர்மானத்தின் மீது பேசிய திமுக உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா , மாநில அரசின் எந்தவித கவனத்திற்கு கொண்டுவராமலும்


தன்னிச்சையாகவும் மத்திய அரசு நிலக்கரி எடுப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுருப்பதாக பேசினார். காவிரி டெல்டா பகுதியில் ஆய்வு செய்தல் மற்றும் பிரித்தெடுத்தல் கூடாது என ஏற்கனவே சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்,  வெளிவந்துள்ள அறிவிப்பு சட்டத்திற்கு புரம்பானது என்பதால் அந்த அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினார்.


அடுத்து பேசிய அதிமுக உறுப்பினர் காமராஜ், காவிரி டெல்டா பகுதியில் விவசாயத்தை தவிர எந்த தொழிற்சாலைகளும் வரக்கூடாது என்பதால் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கடந்த ஆட்சியல் அறிவிக்கப்பட்டதாவும், டெல்டா பகுதிகளில் நிலக்கரி எடுப்பதற்கான டெண்டர் ஓராண்டாக நடைபெறும் நிலையில் அரசுக்கு தெரியாமல் போனது எப்படி எனவும் கேள்வி எழுப்பினார்.


தொடர்ந்து பேசிய காங்கிரஸ் சட்டமன்றக்குழு தலைவர் செல்வப்பெருந்தகை, ஒன்றிய அரசு கொண்டு வரும் திட்டங்கள் அனைத்தும் தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரானது என்பதற்கு இந்த திட்டம் ஒரு உதாரணம் என பேசினார்.


வேளாண் மண்டலம் என தெரிந்தும் தமிழ்நாடு அரசை கலந்து ஆலோசிக்காமல் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது ஜனநாயக படுகொலை எனவும் முதலமைச்சர் கடிதத்திற்கு மதிப்பளித்து அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும் செல்வபெருந்தகை கேட்டுக்கொண்டார்.


தொடர்ந்து பேசிய அதிமுக உறுப்பினர் வைத்திலிங்கம் , காவிரி டெல்டா வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீத்தேன் நிலக்கரி ஆகியவற்றை எடுக்க முடியாது என பேசினார். கொந்தளித்து போயிருக்கும் மக்களின் பதற்றத்தை தவிர்க்கும் வகையில் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் எனவும் வைத்திலிங்கம் பேசினார்.


மேலும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேசும் போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அனுமதி இல்லாமல் தொடர்ச்சியாக மத்திய அரசு தமிழ் விரோத தமிழ்நாட்டு விரோத போக்கை கடைபிடித்து வருகிறது என்றும் தமிழ்நாட்டில் உரிமைகளை காலில் போட்டு மிதிக்கும் இதுபோன்ற செயல்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.  அதோடு, மாநில அரசின் உரிமை இல்லாமல் எவ்வித திட்டத்தையும் கொண்டுவர முடியாது என்பதை தெரிவிக்கும் வகையில் வலுவான தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பி வைக்க வேண்டும் என்றார்.


இதே கருத்தை வலியுறுத்தி பாமக உறுப்பினர் ஜி.கே.மணி, விசிக உறுப்பினர் சிந்தனைச் செல்வன், சிபிஎம், சிபிஐ, கொங்கு நாடு தேசிய கட்சி உறுப்பினர்களும் தங்கள் கருத்துக்களை பதிவுசெய்தனர்.


இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, முதலமைச்சர் எவ்வளவு வேகமாக செயல்பட்டு உடனடியாக பிரதமரின் கவனத்தை ஈர்த்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும் என பேசினார். அதிகாரிகளும் மத்திய அரசின் நிலக்கரி துறையை தொடர்பு கொண்டு அடுத்தகட்ட மேல்நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம் என பேசியிருப்பதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.


தமிழ்நாடு அரசு ஒருபோதும் இத்திட்டத்தை அனுமதிக்காது என்பதை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றிருப்பதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார்.