DMDK: பிரேமலதாவின் காத்திருப்பு வொர்த்தா? தேமுதிக-விற்கு அடிக்கப்போகுதா ஜாக்பாட்?
DMDK: அதிமுக - பாஜக கூட்டணிக்குள் வராமல் தேமுதிக இழுத்தடிப்பதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டின் பிரதான கட்சியான தேமுதிக தங்களது கூட்டணி நிலைப்பாட்டை கடந்த ஜனவரி மாதமே அறிவிக்கிறோம் என்று கூறியிருந்தனர். ஆனால், தற்போது வரை தங்களது கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்காமல் உள்ளனர்.
ஓகே சொல்லாத பிரேமலதா:
கோவை, ஈஷா மையத்தில் நடந்த மகாசிவராத்திரி நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி ஆகியோருடன் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்றுள்ளார். இரவு உணவை இவர்கள் அனைவரும் ஒன்றாக சாப்பிட்டபோது கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் பிரேமலதா விஜயகாந்த் ஒத்துழைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் கூட்டணிக்கு ஒத்துழைக்கவில்லை. பிரேமலதா விஜயகாந்த் தற்போது வரை அதிமுக - பாஜக கூட்டணிக்குள் வராமல் இருப்பதற்கு காரணம் காங்கிரஸ் என்று தகவல் வெளியாகியுள்ளது.
காரணம் இதுதானா?
அதாவது, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகள் ஒதுக்கீடு கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகினன்றனர். இதனால் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் விரிசல் உண்டாகியுள்ளது. இந்த கூட்டணி உடைந்தால் தேமுதிக அந்த இடத்தைப் பிடிக்க திட்டமிட்டுள்ளது. அதன் காரணமாகவே, தற்போது வரை அதிமுக - பாஜக கூட்டணிக்கு சம்மதம் தெரிவிக்காமல் இழுத்தடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஒருவேளை திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறினால், தேமுதிக எதிர்பார்க்கும் இரட்டை இலக்க தொகுதிகளை திமுக வழங்கும் என்று கருதப்படுகிறது. மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை தககவைக்க 8 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் தேமுதிக-விற்கு உள்ளது.
காத்திருப்பு கைகூடுமா?
இதனால், திமுக-வுடன் இணைந்து இந்த தேர்தலில் போட்டியிட்டால் 8 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்று தேமுதிக கருதுகிறது. இதனால், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகும் வரை காத்திருக்கிறது. தேமுதிக கூட்டணிக்குள் வந்தால் வட தமிழகத்தில் பாமக-விற்கு சவால் அளிக்கும் கட்சியாக இருக்கும் தேமுதிக கூட்டணியில் இருப்பது பலமாகவே திமுக-விற்கு அமையும். தென்மாவட்டங்களிலும் விஜயகாந்திற்கு தனிப்பட்ட செல்வாக்கு இருப்பதால், அதுவும் திமுக-விற்கு சாதகமாகவே அமையும் என்று கருதப்படுகிறது.
ஒருவேளை திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினால், அந்த இடத்தை நிரப்ப முதல் ஆளாக கூட்டணியில் இணைவது தேமுதிக-வாகவே இருக்கும் என்றே அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர். தமிழ்நாட்டிற்கான சட்டமன்ற தேர்தல் தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது. திமுக - காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை வரும் 22ம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மாணிக்கம் தாகூரின் செயல்பாடுகளால் காங்கிரஸ் மீது மிக கடுமையான அதிருப்தியில் மு.க.ஸ்டாலினும், திமுகவின் பிற நிர்வாகிகளும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.























