DMDK Meeting: கூட்டணி குறித்து முடிவெடுக்க பிரேமலதாவிற்கு அதிகாரம்.. தேமுதிக ஆலோசனை கூட்டத்தில் முடிவு!

இன்று நடைபெற்ற தேமுதிக ஆலோசனை கூட்டத்தின்போது 10 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Continues below advertisement

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், தேமுதிகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தின்போது 10 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை பின்வருமாறு:

Continues below advertisement

தீர்மானம் : 1

தமிழகத்தில் ஒரு மாற்றம் வேண்டும் அதன் மூலம் ஒரு நல்லாட்சியை தர வேண்டும் என்று உழைத்து தமிழக மக்களுக்காக தன்னை முழுவதும் அர்ப்பணித்து இந்த மண்ணை விட்டு மறைத்தாலும் என்றைக்கும் அனைத்து நெஞ்சத்தில் வாழ்கின்ற மாசில்லா மாணிக்கம் புரட்சிக் கலைஞர், தேமுதிக நிறுவனத்தலைவர், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர், பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் மறைவு வாழ்வில் ஈடு செய்ய முடியாதது. கேப்டன் அவர்களுக்கும், சமீபத்தில் மறைந்த கழகத்தினருக்கும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தீர்மானம்: 2

மறைந்த உலகத் தமிழ் தலைவர் புரட்சிக் கலைஞர் கேப்டன், இந்தியாவின் உயரிய விருதான பத்மபூஷன் விருதை அறிவித்த பாரத பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் இந்த கூட்டம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது. மறைந்த பத்மபூஷன் கேப்டன் அவர்களின் மறைவிற்கு நேரிலும், மின்னஞ்சல் மூலமும், புகழஞ்சலி செலுத்திய பாரத பிரதமர், முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாட்டு முதல்வர், தமிழக ஆளுநர், புதுச்சேரி ஆளுநர், ஜார்க்கண்ட் ஆளுநர், மத்திய அமைச்சர்கள்,மாநில அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும், திரைப்படத் துறையை சேர்ந்த ரஜினி, கமல் உள்ளிட்ட அனைத்து நட்சத்திரங்களுக்கும், திரைத்துறை வல்லுனர்கள், தயாரிப்பாளர்கள், தொழிலாளர்கள், சின்னத்திரை கலைஞர்கள், உள்ளிட்ட அனைவருக்கும், இரவு, பகல் பாராமல் அஞ்சலி செலுத்திய அனைத்து தமிழக மக்களுக்கும், கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள், பத்திரிக்கை, ஊடகம் மற்றும் யூடியூப் நண்பர்களுக்கும், காவல்துறை, அரசு அதிகாரிகள், அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்த தமிழக அரசுக்கும், கேப்டன் மீது அளவில்லா அன்பு வைத்திற்குக்கும் உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களுக்கும், தமிழகத்தை தமிழர்களுக்கும், கேப்டனின் இறுதி ஊர்வலத்தில் வழிநெடுக்க மலர்தூவி இறுதி அஞ்சலி செலுத்தி பிரியா விடை கொடுத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என்றும் நெஞ்சம் மறவாத நன்றியை தேமுதிக தெரிவித்துக்கொள்கிறது. 

தீர்மானம் : 3

ஜாதி, மத, பேதமின்றி எல்லா அரசியல் தலைவர்களோடு இணக்கமாக வாழ்ந்து மறைந்த கேப்டன் மறைவிற்கு ஜாதி, மத, அரசியலுக்கு அப்பால் அனைத்து தரப்பினரும் ஒன்று சேர்ந்து தமிழகம் முழுவதும் அமைதிப் பேரணி மற்றும் புகழஞ்சலி செலுத்திய அனைவருக்கும் தேமுதிக நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் : 4

மீளாத்துயரிலும், துக்கத்திலும் மனம் தளராமல் அவர் விட்டுச் சென்ற கொள்கையை அவர்தம் பாதையில் சென்று வெற்றியடைய அயராமல் உழைத்திடும் தேமுதிக பொதுச்செயலாளர் மக்கள் தலைவி பிரேமலதா விஜயகாந்துடன் என்றென்றும் எதற்கும் அஞ்சாமல் துணை நின்று வெற்றி படைப்போம் என்று மாவட்ட கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள் உள்ளிட்ட கழக தொண்டர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் உறுதி ஏற்போம் என்று தேமுதிக பறைசாற்றுகிறது.

தீர்மானம் : 5

தேமுதிக தலைமைக் கழக வளாகத்தில் சந்தன பேழையில் உறங்கிடும் புரட்சிக் கலைஞர் கேப்டன் அவர்களின் உறைவிடத்தை கேப்டன் கோவிலாக மாற்றி தமிழக மக்களுக்கு அர்ப்பணிக்குமாறு கழக பொதுச்செயலாளரிடம் இந்த கூட்டத்தின் வாயிலாக தெரிவித்துகொள்ளப்படுகிறது.

தீர்மானம் : 6

பசியோடு வரும் அனைத்து மக்களுக்கும் உணவு படைத்து அவர்களின் பசியாற செய்து அந்த மகிழ்ச்சியில் வாழ்ந்து மறைந்த பத்மபூஷன் புரட்சிக் கலைஞர் கேப்டன் அவர்கள் சன்னதியில் தினந்தோறும் அன்னதானம் மற்றும் உதவிகள் செய்திட வள்ளல் விஜயகாந்த் மெமொரியல் அன்னதான டிரஸ்ட் (VALLAL VIJAYAKANT MEMORIAL ANNATHANA TRUST) உருவாக்கிய கேப்டன் குடும்பத்தினருக்கு இந்த கூட்டம் நன்றி செலுத்துகிறது. நீண்ட நாட்களாக நீங்கள் அனைவரும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, கழகத்தை சேர்ந்த அனைவரின் குடும்பங்களில் நிகழும் பிறந்தநாள் திருமணநாள், சுப நிகழ்ச்சிகள், குடும்பத்தாரின் நினைவு நாள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு கேப்டன் கோவிலில் அன்னதானமாகவோ, நலத்திட்ட உதவிகளாகவோ தலைமை கழகத்திடம் முன் அனுமதி பெற்று தங்களின் உதவிகளை செய்யலாம் என்று தேமுதிக இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம்: 7

பத்மபூஷன் புரட்சிக் கலைஞர் கேப்டன் அவர்களுக்கு மாவட்டம் தோறும் சிலை நிறுவிட தலைமை கழகத்திடம் ஆலோசனை செய்து மாவட்ட கழகச் செயலாளர்கள் அந்தந்த மாவட்டங்களில் சிலை அமைக்க முடிவு எடுப்பதாக இந்த கூட்டத்தின் வாயிலாக தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

தீர்மானம் : 8

வருகின்ற பிப்ரவரி 12 கொடி நாள் அன்று அனைத்து கிராமங்கள், நகரங்கள் உள்ளிட்ட அனைத்து கிளைகளிலும் புரட்சி தீபக் கொடி ஏற்றிடவும், தீவிர கட்சி உறுப்பினர் சேர்க்கை சேர்க்கவும் இந்த கூட்டத்தில் உறுதி ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

தீர்மானம்: 9

தேர்தல் விதிமுறைகள் அமுலுக்கு வருவதற்கு முன் கேப்டன் புகழை எடுத்துரைக்கும் வகையில் அனைத்து மாவட்டத்திலும் கிராம சபை கூட்டங்கள், தெரு முனை பிரச்சாரங்கள், சிறிய அளவிலான கூட்டங்கள் மூலம் கேப்டன் அவர்களின் புகழ் மக்களுக்கு சென்றடையும் வகையில் கூட்டங்கள் நடத்திட வேண்டும். தமிழகம் முழுவதும் தேமுதிகவின் நான்கு மண்டலங்களில் கேப்டன் அவர்களின் நினைவேந்தல் புகழஞ்சலியை மாபெரும் பொதுக்கூட்டமாக நடத்திட தேமுதிக இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் : 10

தேமுதிக இதுவரைக்கும் எந்த கட்சியுடனும் கூட்டணி குறித்து மறைமுகமாகவோ, அதிகாரப்பூர்வமாகவோ பேசவில்லை. ஊடகங்களில் வரும் செய்திகள் யூகமாகவே கருதப்படுகிறது.மாவட்ட கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டு கூட்டணி பேச குழு அமைத்திடவும், கூட்டணி குறித்து இறுதி முடிவெடுக்கும் முழு அதிகாரத்தை மரியாதைக்குரிய கழக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு வழங்கி இந்த கூட்டம் தீர்மானம் நிறைவேற்றுகிறது.

Continues below advertisement
Sponsored Links by Taboola