DMDK: ஓடாத குதிரைக்கு கொள்ளா? கேப்டன் இல்லாத தேமுதிக கரையேறுமா? தேர்தல் அரசியலில் தேறுமா?
TN Election 2026 DMDK: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிகவின், கடந்த கால தேர்தல் முடிவுகள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

TN Election 2026 DMDK: சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக உருவெடுத்த தேமுதிக 10 ஆண்டுகளில் 1 சதவிகிதத்திற்கு குறைவான வாக்கு வங்கிக்கு சரிந்த வரலாற்றை இந்த தொகுப்பில் அறியலாம்.
திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிக
கடந்த 2016ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் போது, பழம் நழுவி (தேமுதிக) பாலில் விழும் (திமுக கூட்டணி) என காத்திருந்த, கருணாநிதிக்கு ஏமாற்றமும், தோல்வியுமே மிஞ்சியது. இந்நிலையில், தந்தைக்கு கிடைக்காத விஜயகாந்த் கட்சியின் ஆதரவு 10 ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது மகன் ஸ்டாலினுக்கு கிடைத்துள்ளது. ஆனால், காங்கிரஸ் உடனான கருத்து மோதலுக்கு மத்தியில் கூட்டணியில் இணைந்துள்ள, தேமுதிகவானது திமுகவின் வெற்றிக்கு எந்த அளவிற்கு உதவும் என்பதே தற்போதைய கேள்வியாகும். இதற்கான பதில் தேர்தல் முடிவிலேயே தெரியும் என்றாலும், கடந்த கால தேர்தல்களில் தேமுதிகவின் செயல்பாடு எப்படி உள்ளது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
தேமுதிக களம் கண்ட தேர்தல்கள்
1. கர்ஜித்த விஜயகாந்த், அதிர்ந்த தமிழக தேர்தல் களம் - 2006
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத மற்றும் மரியாதை மிக்க நட்சத்திரமாக இருந்த விஜயகாந்த், கடந்த 2005ம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் எனும் கட்சியை தொடங்கினார். மாநிலம் முழுவதும் சூறாவளி பயணத்தை மேற்கொண்ட அவர், அதிமுக மற்றும் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார். 2006 தேர்தலில் நிலவிய மும்முனைப் போட்டியில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 232 தொகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்கினார். ஆனால், விஜயகாந்த் மட்டுமே விருதாச்சலம் தொகுதியிலிருந்து வெற்றி பெற்று சட்டப்பேரவைக்கு சென்றார். அதேநேரம், 8.38 சதவிகித வாக்குகளை பெற்று கவனத்தை ஈர்த்தார். அந்த தேர்தலில் 39.91 சதவிகித வாக்குகளை பெற்ற அதிமுக வெறும் 4.84 சதவிகித வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவிடம் ஆட்சியை இழந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது அந்த தேர்தலில் தேமுதிக பெற்ற வாக்குகள் தான், வெற்றி தோல்வியையே தீர்மானித்தது.
2. திமுக, அதிமுகவை அலறவிட்ட தேமுதிக - 2009
கட்சியின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் விதமாக 2009ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும், 39 மக்களவை தொகுதிகளிலும் தேமுதிக தனித்து போட்டியிட்டது. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாவிட்டாலும், 10.3 சதவிகித வாக்குகளை பெற்று திமுக, அதிமுமவிற்கு சவால் விடுக்கும் வகையிலான வலுவான தலைவராக விஜயகாந்த் உருவெடுத்தார். அடுத்த தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக அவர் இருப்பார் என்ற கருத்தும் மாநிலம் முழுவதும் பேசுபொருளானது.

3. எதிர்க்கட்சி தலைவரான விஜயகாந்த் - 2011
விஜயகாந்தின் பலத்தை உணர்ந்த ஜெயலலிதா ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற தீர்மானத்துடன் தேமுதிகவுடன் கூட்டணி அமைத்தார். அந்த தேர்தலில் 41 தொகுதிகளில் போட்டியிட்ட விஜயகாந்த் கட்சி, 29 இடங்களில் வென்றது. திமுகவின் படுதோல்வியால் தேமுதிகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தும் கிடைத்தது. அந்த மிகப்பெரும் வெற்றியே தேமுதிகவின் சரிவின் தொடக்கமாகவும் அமைந்தது. சட்டமன்றத்திலேயே அதிமுகவுடன் கருத்து மோதலில் ஈடுபட்டு, கூட்டணியில் இருந்து வெளியேறினார்.
4. பாஜக உடன் கூட்டணி - 2014
தனித்து போட்டியிட்ட வரை சுமார் 10 சதவிகித வாக்குகளை பெற்று வந்த தேமுதிக, 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து 14 தொகுதிகளில் போட்டியிட்டது. இதனால் ஒரே அடியாக கட்சியின் வாக்கு சதவிகிதம் சுமார் 5 சதவிகிதமாக வீழ்ச்சி கண்டது. போட்டியிட்ட ஒரு தொகுதியில் கூட விஜயகாந்த் கட்சியால் வெற்றி பெறமுடியவில்லை

5. வீணாய்போன கருணாநிதியின் எதிர்பார்ப்பு - 2016
கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் ஆட்சி அமைக்கும் முனைப்பில் இருந்த கருணாநிதி, பழம் நழுவி (தேமுதிக) பாலில் விழும் (திமுக கூட்டணி) என நம்பிக்கை தெரிவித்தார். ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக மதிமுக, கம்யூனிஸ்ட்கள் மற்றும் விசிக போன்ற கட்சிகளுடன் சேர்ந்து விஜயகாந்த் மக்கள் நல கூட்டணி என்பதை அமைத்தார். பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜயகாந்திற்கே டெபாசிட் கூட கிடைக்கவில்லை. தேமுதிகவின் வாக்கு சதவிகிதம் வெறும் 2.4 சதவிகிதமாக பாதாளத்திற்கு சென்றது. ஆனால் இந்த கூட்டணி பிரித்த வாக்ககுகள் மூலம் அதிமுக மீண்டும் வென்று ஆட்சியை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
தேமுதிக வீழ்ந்த கதை
விஜயகாந்த் தீவிர அரசியலில் ஈடுபட்ட வரை தேமுதிக வாக்கு அரசியல் மதிக்கத்தக்க நிலையில் இருந்தது. ஆனால், 2016-18 காலகட்டத்தில் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து கள அரசியலில் இருந்து மெல்ல மெல்ல விலகினார். அதேநேரம், அவரது மனைவி பிரேமலதா படிப்படியாக கட்சி நிர்வாகத்தை கையிலெடுத்தார். அதன் பிறகு தேமுதிகவின் வளர்ச்சி என்பது கனவாகபே மாறிப்போனது. இதன்பிறகு அந்த கட்சி களம் கண்ட அடுத்தடுத்த தேர்தல்களின் முடிவு, முந்தைய தேர்தல்களின் முடிவை காட்டிலும் மோசமாக அமைந்தது. மக்களுடன் தொடர்பில் இல்லாமல் போனது, களநிலவரத்தை அறியாமல் கூட்டணி கணக்குகளில் ஈடுபட்டது, தலைமைக்கான லாபத்தை மட்டுமே கருத்தில் கொண்ட எடுத்த முடிவுகளால், கிங்-மேக்கராக இருந்த தேமுதிக தமிழ்நாட்டில் உள்ள பலவீனமான கட்சிகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.

10 ஆண்டுகளில் கரைந்து போன தேமுதிக
- 2019ம் ஆண்டில் அதிமுக - பாஜக கூட்டணியில் 4 மக்களவை தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக, படுதோல்வி கண்டு 2.19 சதவிகித வாக்குகளையே பெற்றது
- 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அமமுகவுடன் கூட்டணி அமைத்து 60 தொகுதிகளில் களம் கண்டது. பெரும்பாலான தொகுதிகளில் டெபாசிட்டை இழந்ததோடு, கட்சியின் வாக்கு சதவிகிதம் 0.43-1.68 சதவிகிதமாக வீழ்ந்தது. விஜயகாந்த் வென்ற விருதாச்சலம் தொகுதியில் போட்டியிட்ட பிரேமலதா விஜயகாந்தால் மூன்றாவது இடமே பிடிக்க முடிந்தது
- 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில் 5 தொகுதிகளில் போட்டியிட்டாலும், தொடர்ந்து நான்காவது தேர்தலிலும் ஒரு இடத்தில் கூட தேமுதிகவால் வெல்ல முடியவில்லை. கட்சி வெறும் 2.59 சதவிகித வாக்குகளையே பெற்றது
தேமுதிக கம்பேக் தருமா?
இந்த சூழலில் தான், கட்சி ஆரம்பிக்கட்ட 21 ஆண்டுகளில் முதல்முறையாக திமுக உடன் தேமுதிக கூட்டணி அமைத்துள்ளது. இதன் மூலம் தனது கட்சியின் எதிர்காலத்தை காப்பாற்றிடவும், வெற்றி என்பதை சுவைத்துவிட வேண்டும் என்ற நோக்கிலும் பிரேமலதா இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த முடிவு தேமுதிகவிற்கு பல அளிக்குமா? திமுகவின் வெற்றிக்கு உதவுமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
























