புதுச்சேரி: புதுச்சேரியில் தீபாவளி தினமான அக்டோபர் 31 அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிப்பதற்கு புதுச்சேரி சுற்றுச்சூழல் துறை மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு குழுமம் அனுமதி வழங்கியுள்ளது.


பட்டாசு வெடிக்கும் நேரம் 


புதுச்சேரியில் தீபாவளி அன்று, காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி, புதுச்சேரி சுற்றுச்சூழல் துறை மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு குழுமம் அறிவித்துள்ளது. மருத்துவமனைகள், வழிப்பாட்டு தலங்கள், கல்வி கூடங்கள், நீதிமன்ற சுற்றுவட்டாரங்களில் 100 மீட்டருக்குள் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


தீப ஒளித்திருநாள்


தீபாவளி (Deepavali, Diwali) திருநாள் என்பது ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்ற பண்டிகையாகும். இது இந்து, சீக்கியம், சைனம் மற்றும் பௌத்தம் மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். இப்பண்டிகை இந்தியா இலங்கை சிங்கப்பூர் உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. அதாவது, வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை ஐப்பசி மாதத்தில் திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை மற்றும் அதற்கடுத்த சுக்கிலப்பிரதமை, பௌ-பீச்சு ஆகிய நாட்களில் கொண்டாடப்படுகிறது.


நரக சதுர்தசி


தமிழகத்தில் சில ஆண்டுகளில் ஐப்பசி அமாவாசை முன்தினம் நரக சதுர்தசி அன்று கொண்டாடுகிறார்கள். பெரும்பாலான ஆண்டுகளில் தீபாவளி பண்டிகை ஐப்பசி மாத அமாவாசை நாளன்று கொண்டாடப்படுகிறது. கிரகொரியின் நாட்காட்டி படி அக்டோபர் 17ஆம் நாளிலிருந்து நவம்பர் 15ஆம் தேதி வரையான நாட்களில் தீபாவளி வருகிறது. இந்தியா, நேபாளம், இலங்கை, மியான்மர், சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிசி போன்ற நாடுகளில் அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர். மலேசியா, சிங்கையில் வாழும் இந்தியர்களும், தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.