வங்கக்கடலில் உருவாகியுள்ள டித்வா புயல் காரணமாக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் இன்று காலை முதல் மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. 

Continues below advertisement

டித்வா புயல்:

தற்போது டித்வா புயல் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை வடக்கு திசையில் இருந்து வடக்கு - வடமேற்கு திசை நோக்கி 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. தற்போது இந்த புயல் ஜாஃப்னாவில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவிலும், வேதராண்யத்தில் இருந்து தென்கிழக்கு 140 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தும், காரைக்காலில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு - தென்கிழக்கிலும், பாண்டிச்சேரியில் இருந்து 250 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 350 கிலோ மீட்டர் தொலைவிலும் இந்த புயல் தற்போது உள்ளது. 

எங்கெல்லாம் ரெட் அலர்ட்?

டித்வா புயல் காரணமாக கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில்  கனமழை முதல் மிக கனமழை வரை உள்ளது. இந்த மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

அதேபோல, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த மாவட்டங்களில் கன முதல் மிக கன மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு உள்ளதால் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாளை, நாளை மறுநாள் எப்படி?

நாளை திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த மாவட்டத்திற்கு 2 ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் பாண்டிச்சேரிக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் திருவள்ளூர் மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டெல்டா பகுதி, கடலோர மாவட்டங்கள், பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை இன்று காற்று வீச உள்ளது. 

தயார் நிலையில் மாநகராட்சி:

தமிழ்நாட்டில் டித்வா புயல் காரணமாக தொடர்ந்து மழை பெய்து வரும் சூழலில், தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு கடலோர மற்றும் மழை அதிகம் பெய்யும் வாய்ப்புள்ள மாவட்டங்களில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மழைநீர் அதிகம் தேங்கும் வாய்ப்புள்ள மாவட்டங்களில் அரசு சார்பில் மழைநீரை உடனே அகற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  சென்னையில் மழைநீர் அதிகம் தேங்கும் என்று கணிக்கப்பட்டுள்ள சாலைகளில் மாநகராட்சி சார்பில் பணியாளர்கள் தயார் நிலையில் வைக்கபபட்டுள்ளனர்.