தமிழ்நாட்டில் மகத்தான நாகரிகம் இருந்தது என்பதை மண் காட்டிக்கொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டில் நடக்கும் பல அகழாய்வுகள் நமக்கு பலவற்றை உணர்த்துகின்றன. அகழாய்வு செய்யாமலே மண்ணின் மேலடுக்கிலே அல்லது மண்மூடிய மேட்டிலிருந்து கிடைக்கும் பல அரிய பொக்கிஷங்களை நமக்கு தென்பெண்ணையாற்று நாகரிகம் அளித்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உட்பட்ட தென்பெண்ணை ஆற்றங்கரைகளில் நூற்றுக்கணக்கான தொல்லியல் எச்சங்கள் நமக்கு கிடைக்கின்றன. அதுபோல, சற்றும் எதிர்பாராமல் கிடைத்த பொக்கிஷம் தான் தானிப்பாடி அருகே உள்ள வேளூரில் கிடைத்த வேட்டை நாய்க்கு வைத்த நடுகல். 



 


அண்மையில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர் பராமரிப்பு பணியின்போது, ”தா.வேளூர் பாம்பாற்றுப் படுகையில் அமைந்துள்ள வேடியப்பன் கோயிலில் ,உள்ள நடுகற்கள் அருகே இருந்த மேட்டுப்பகுதியைச் சரிசெய்யும்போது, தட்டுப்பட்ட கல்லை எடுத்து பார்த்தபோது முகமற்ற நாயின் உருவம் தெரிந்தது.  என்ன அரிதான ஒரு சிற்பமாக இருக்கிறேதே என்று அருகில் மேலும் ஆய்வு செய்யும்போது மற்றொரு கல்லில் நாயின் தலையும் எதிரே பன்றியின் உருவமும் கொண்ட கல்லும் கிடைத்துள்ளது. இரண்டும் ஒட்டவைத்து பார்த்ததில் முழுஉருவம் தெரியவந்தது. இதுபற்றி மேலும் ஆய்வு செய்கையில், இதே போன்று உருவமுள்ள சில நடுகற்கள் கர்நாடகா பகுதியில்கிடைத்துள்ளது. தமிழ்நாட்டிலும் ஏற்கனவே நாய்க்கு வைத்த நடுகற்கள் கிடைத்துள்ளன. ஆனாலும் இதுபோன்று நாய் பன்றியுடன் சண்டையிட்டு இறந்ததின் நினைவாக வைக்கப்பட்ட நடுகல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த நாயின் உருவம் நல்ல வேட்டை நாய்க்கு உண்டான உடல்வாகுடன் உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது




பயிரை உண்டு அழிக்க வந்த காட்டுப்பன்றியுடன் சண்டை செய்யும்போதோ அல்லது தனது எஜமானுடன் வேட்டைக்கு செல்லும்போதோ காட்டுப்பன்றியுடன் சண்டையிட்டு நாய் இறந்துள்ளது. இந்த நன்றியுள்ள நாய்க்கு அப்போதே நடுகல்லும் வைத்துள்ளனர். ஆனால்காலப்போக்கில் அது உடைந்து பூமிக்குள் சென்றுள்ளது. இந்த நடுகல்லின் சிற்ப அமைப்பை நோக்கும்போது இது சுமார் 1000 ஆண்டுகள் பழமையானவை என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும் இத்துடன் தஞ்சை பெரிய கோயில் ஓவியத்தில் உள்ள நாய் உருவத்துடனும் இது ஒத்ததாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தஞ்சை ஓவியத்தில் உள்ள நாய் அலங்கு என்ற இனத்தைச் சேர்ந்தது என்ற செய்தி பரவலாக பகிரப்பட்டது. 



 


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X


இது தொடர்பாக சூழலியல் அறிஞர் தியோடர் பாஸ்கரன் அவர்களை தொடர்புகொண்டு கேட்டபோது, “அவ்வாறு ஒரு நாய் இனமே இல்லை என்றும் அலங்கு என்பது வேறு வகை உயிரினம் என்று தெளிவுபடுத்தினார். எனவே அலங்கு என்பது நாய் இனம் அல்ல என்பதும் இங்கு வலியுறுத்தப்படுகிறது. எடத்தனூர் நாய் நடுகல்லுக்கு அடுத்ததாக கிடைத்த இந்த நடுகல்லும் நேரில் சென்று பார்க்கத்தூண்டும் ஒன்றுதான்” என்றார்