Digital arrest scams : உஷார்... சிக்கிக்காதிங்க... டிஜிட்டல் அரெஸ்டில் சிக்கிய புதுச்சேரி; ஒரே நாளில் 33.63 லட்சம் மோசடி
சைபர் மோசடி செய்த குற்றத்திற்காக டிஜிட்டல் அரெஸ்ட் செய்து உள்ளதாக மிரட்டி 7 பேரிடம் 34 லட்சத்து 10 ஆயிரத்து 341 ரூபாய் மோசடி

டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளதாக முதியவரிடம் ரூ.33.63 லட்சம் மோசடி
புதுச்சேரி, நெல்லித்தோப்பு எல்லைப்பிள்ளை சாவடி பகுதியை சேர்ந்தவர் சதீஷ் ஷா (வயது 64.) இவரை கடந்த 15 நாட்களுக்கு முன் தொடர்பு கொண்ட மர்ம நபர், டில்லியில் இருந்து சி.பி.ஐ., போலீஸ் அதிகாரி பேசுவதாக கூறியுள்ளார்கள். அவர், சதீஷ் ஷாவை சைபர் மோசடி செய்த குற்றத்திற்காக டிஜிட்டல் அரெஸ்ட் செய்து உள்ளதாக மிரட்டியுள்ளார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டுமென கூறினார்.
இதை நம்பிய சதீஷ் ஷா கடந்த 15 நாட்களில் பல்வேறு தவணைகளாக 33 லட்சத்து 63 ஆயிரத்து 160 மர்மநபர் தெரிவித்த வங்கி கணக்கிற்கு செலுத்தியுள்ளார். அதன்பிறகே, ஆன்லைன் மோசடி கும்பலிடம் ஏமாந்து பணத்தை இழந்தது அவருக்கு தெரியவந்தது.
டிஜிட்டல் அரெஸ்ட்
இதேபோல், கோரிமேட்டை சேர்ந்த ரேணுகா 9 ஆயிரத்து 600 ரூபாய், நைனார்மண்டபம் ராணி 15 ஆயிரம், பூமியான்பேட் ஜவஹர் நகர் ஸ்வாதி 6 ஆயிரத்து 116 ரூபாய், லாஸ்பேட்டை, ஜீவானந்தபுரம், பாரதி வீதியை சேர்ந்த ஜோதி ஷர்மிளா ஆயிரத்து 200 ரூபாய், அரும்பார்த்தபுரம் ராகவேந்திர பிரசாத் 4 ஆயிரத்து 265, புதுச்சேரியை சேர்ந்த சுமதி 11 ஆயிரம் என மொத்தம் 7 பேர் 34 லட்சத்து 10 ஆயிரத்து 341 இழந்துள்ளனர். இதுகுறித்த புகார்களின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரியில் 7 பேர் ஆன்லைன் மோசடி கும்பலிடம் 34 லட்சத்து 10 ஆயிரம் இழந்துள்ளனர்
ஏர்போர்ட் சுங்கவரி அதிகாரி பேசுவதாக கூறி மோசடி
புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சேர்ந்தவர் மேரிஜூலி. இவரை மொபைல் போனில் தொடர்பு கொண்ட நபர், சென்னை ஏர்போர்ட் சுங்கவரி அதிகாரி பேசுவதாக கூறி, உங்களது பெயரில் 70 ஆயிரம் டாலர் மதிப்பிலான பார்சல் வந்துள்ளது. அந்த பார்சலை பெறுவதற்கு சுங்க கட்டணம் செலுத்த வேண்டுமென கூறியுள்ளனர். இதை நம்பிய மேரிஜூலி ரூ. 5.80 லட்சத்தை செலுத்தி ஏமாந்தார்.
துணி விளம்பரத்தை நம்பி 1 லட்சத்து 23 ஆயிரத்து 686 ரூபாய் இழந்த தம்பதி
வில்லியனுார், பரசுராமபுரம் பாரதிதாசன் நகரைச் சேர்ந்தவர் மங்கலட்சுமி. இவர் இணையதளத்தில் வந்த துணி விளம்பரத்தை நம்பி 1 லட்சத்து 23 ஆயிரத்து 686 ரூபாய் செலுத்தி துணிகளை ஆர்டர் செய்தார். ஆனால் துணி வரவில்லை. பின் அவர் பணம் செலுத்திய இணையதளம் போலி என்பது தெரியவந்தது.
குறைந்த வட்டியில் லோன் என கூறி மோசடி
மூலகுளத்தைச் சேர்ந்த ஆனந்தராயலு என்பவரை தொடர்பு கொண்ட நபர் குறைந்த வட்டியில் ரூ. 1.5 லட்சம் கடன் தருவதாக கூறினார். இதைநம்பி லோன் பெற விண்ணப்பித்து செயலாக்க கட்டணமாக 36 ஆயிரத்து 917 ரூபாய் செலுத்தி ஏமாந்தார்.
முத்திரையர்பாளையத்தை சேர்ந்த அறிவரசன் 2 லட்சத்து 21 ஆயிரம், பாரதி தாசன் நகர் அருண்குமார் 25 ஆயிரம், ரெட்டியார்பாளையம் அருண்பிரசாத் 25 ஆயிரம், தவளக்குப்பம் சுரேஷ் 18 ஆயிரத்து 558 ரூபாய், பாக்கியராஜ் 14 ஆயிரம், புதுச்சேரி அஸ்வதி 90 ஆயிரம், காரைக்கால், கோட்டுசேரி மணிகண்டன் 10 ஆயிரம், கருவடிக்குப்பம் ராமலிங்கம் 1,050, சாமிபிள்ளை தோட் டம் ஸ்ரீதரன் 6 ஆயிரம் என, மொத்தம் 12 பேரிடம் மோசடி கும்பல் 11 லட்சத்து 51ஆயிரத்து 289 ரூபாய் ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்து புகார்களின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.