மாநில அளவிலான பாரா டேக்வாண்டோ போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளி மாணவர், உலக அளவில் நடைபெறும் போட்டியில் மெக்சிகோ செல்வதற்கு தமிழக அரசு உதவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பூதநத்தம் கிராமத்தைச் சார்ந்த இளவரசன்-ஜெயந்தி தம்பதிக்கு இசையமுதன், சங்கீதா என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வாகன விபத்தில் இளவரசன் உயிரிழந்தார். இந்த விபத்தில் இசையமுதம் தலையில் படுகாயம் அடைந்தார். இதனை அடுத்து சிறிய வீட்டில் வசித்து வரும் ஜெயந்தி, வீட்டருகே சிறிய பெட்டி கடை வைத்து குழந்தைகளை படித்து வைத்து வருகிறார். மேலும் மாற்றுத் திறனாளியாக இருந்தாலும், செஸ், டென்னிஸ் என அனைத்து வகை போட்டிகளிலும், பள்ளி மற்றும் கிராமத்தில் சாதாரண மாணவர்கள் கலந்து கொள்ளும் அனைத்து போட்டிகளிலும் அவர்களுக்கு நிகராக கலந்து கொண்டு, இசையமுதன் விளையாடி வருகிறார். மேலும் டேக்வாண்டோ பயிற்சி பெற்றுக் கொண்டு, தருமபுரி மாவட்டத்தில் நடைபெறுகின்ற அனைத்து வகையான டேக்வாண்டோ போட்டியிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்று பதக்கங்களையும், சான்றிதழ்களை பெற்றுள்ளார்.

 

இந்நிலையில் கடந்த மாதம் தேசிய அளவில் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடைபெற்ற, பாரா டேக்வாண்டோ போட்டியில் கலந்து கொண்டு தமிழகத்திற்கு முதலிடம் பெற்று, நான்கு தங்கப்பதக்கம், வெள்ளிப் பதக்கம் என ஒன்பது பழக்கங்களை பெற்றுள்ளனர். இதில் இசை அமுதன் முதலிடத்தில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். மேலும் உலக அளவில் டிசம்பர் மாதம் மெக்ஸிகோவில் பாரா டேக்வாண்டா போட்டி நடைபெற உள்ளது. அதற்கு தமிழகத்தில் வெற்றி பெற்ற இசையமுதன் உட்பட நான்கு மாற்றுத்திறனாளி மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். இந்தப் போட்டிக்கு செல்வதற்கு பயண செலவு மட்டுமே சுமார் 3 லட்சம் ரூபாய் செலவாகிறது.

 

ஆனால் தந்தை இல்லாத சூழலில் சிறிய பெட்டிக்கடை வைத்து பிழைப்பு நடத்தி வரும் தாய் ஜெயந்தியால் பயணச் செலவுக்கான பணத்தை கொடுக்க முடியாத சூழல் இருந்து வருகிறது. இதனால் மாற்றுத் திறனாளி மாணவன் இசையமுதன், மெக்ஸிகோ போட்டியில் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் மாற்று திறனாளிகளுக்கான பாரா டேக்வாண்டோ போட்டியில், இசையமுதன் கலந்து கொள்ளும் பட்சத்தில், முதலிடத்தில் வெற்றி பெற்று இந்திய நாட்டிற்கு பெருமை சேர்க்க வாய்ப்புள்ளது. இதனால் இசையமுதம் உட்பட மாற்றுத் திறனாளி மாணவர்கள் உலக அளவிலான டேக்வாண்டோ போட்டியில் கலந்து கொள்ள, மெக்ஸிகோ செல்வதற்கு பயண செலவு உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு உதவி செய்ய வேண்டும் என மாற்றுத் திறனாளி மாணவன் இசையமுதன் மற்றும் தாய் ஜெயந்தி, தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.