’டாக்டர்கள் யாரும் வந்து பாக்கல. எந்த ட்ரீட்மெண்ட்டும் தரல’ - கரும்பூஞ்சையால் பாதிக்கப்பட்டவரின் மகள் கண்ணீர்

யாருமே வந்து பார்க்கல. எந்த ட்ரீட்மெண்ட்டும் தரல. முடிந்தால் ட்ரை பண்ணுவோம்னு சொல்லுறாங்க. எமர்ஜென்சி. கரும்பூஞ்சைக்கு மெடிசன் இருந்தா அனுப்பி வையுங்க என கதறுகிறார்.

Continues below advertisement

கோவையில் கரும்பூஞ்சை தொற்றினால் பாதிக்கப்பட்டவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படவில்லை என புகார் தெரிவித்துள்ள அவரது மகள் கரும்பூஞ்சைக்கான மருந்தினை அனுப்பி  உதவுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா பெருந்தொற்றில் இருந்து மீள்வதற்குள், கரும்பூஞ்சை, வெள்ளைப் பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை என அடுத்தடுத்து வரும் தொற்றுகள் மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன. கடந்த சில நாட்களாக கரும்பூஞ்சை தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பல்வேறு இடங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.

Continues below advertisement

இந்நிலையில் கோவை மாவட்டத்திலும் கரும்பூஞ்சை தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதுவரை கரும்பூஞ்சை தொற்று பாதிப்பு 21 பேருக்கு உறுதியாகியுள்ளது. இந்நிலையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டும் 11 பேர் கரும்பூஞ்சை தொற்று அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவை மாவட்டம் மதுக்கரை அருகேயுள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த 47 வயதான கந்தசாமி என்பவருக்கு கரும்பூஞ்சை தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து ஒரு வார காலத்திற்கு மேலாக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கந்தசாமி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கந்தசாமிக்கு எந்த சிகிச்சையும் அளிக்காமல், மருத்துவர்கள் கூட வந்து பார்க்கவில்லை என புகார் எழுந்துள்ளது. மேலும் கோவை அரசு மருத்துவமனையில் அத்தொற்று பாதிப்புக்கு வழங்கப்படும் மருந்துகள் இல்லை எனவும், பல தனியார் மருத்துவமனைகளில்  முயற்சித்தும் மருந்துகள் கிடைக்கவில்லை என அவரது மகள் சுபாஷினி புகார் தெரிவித்துள்ளார்.

கரும்பூஞ்சை தொற்றினால் பாதிக்கப்பட்ட கந்தசாமிக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்பதையும், தந்தையை காப்பாற்ற கரும்பூஞ்சைக்கான மருந்தை அனுப்பி உதவுங்கள் என்ற வேண்டுகோளை முன் வைத்து ஒரு வீடியோ பதிவினை வெளியிட்டுள்ளார். அதில் பேசும் சுபாஷினி, ”எங்க அப்பாவிற்கு கரும்பூஞ்சை தொற்று தாக்கியிருக்கு. அது எங்களுக்கு தெரியல. ரெண்டு நாளா அது கரும்பூஞ்சைதான்னு தெரியல. அதுக்கு அப்புறம் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அட்மிட் பண்ணியிருக்கோம். ஜி.ஹெச் வந்து ஒரு வாரம் ஆச்சு. எந்த டிரிட்மெண்ட்டும் தரல. டாக்டர்சும் வந்து பார்க்கவும் மாட்டிங்கறாங்க. என்னனு எங்களுக்கு ஒன்னும் சொல்லவும் மாட்டிங்கராங்க. டாக்டர் வரலனு சொல்லுறாங்க. ஆனா யாரும் வரமாட்டிங்கறாங்க. இதுவரை யாருமே வந்து பார்க்கல. எந்த டிரிட்மெண்டும் தரல. முடிந்தால் ட்ரை பண்ணுவோம்னு சொல்லுறாங்க. எமர்ஜென்சி. கரும்பூஞ்சைக்கு மெடிசன் இருந்தா அனுப்பி வையுங்க” எனத் தெரிவித்துள்ளார்.

இதேபோல கரும்பூஞ்சை தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையும் அளிக்காமல், மருந்தும்  இல்லாமல் படுக்க வைத்திருப்பது உறவினர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்புகள் ஏற்படும் முன் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது உறவினர்களின் கோரிக்கையாக உள்ளது.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola