தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள "Mandous" புயல் சென்னைக்கு தென்கிழக்கே 520 கி.மீ தொலைவில் உள்ளது. மேலும், இன்று மாலை புயலானது, தீவிர புயலாக மேலும் வலுப்பெறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இது மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே வடக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.


மேலும் டிசம்பர் 09 நள்ளிரவில் காற்றானது, மணிக்கு 85 கிமீ வேகத்தில் அதிகபட்சமாக வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இந்நிலையில் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடல்களில், பெரும் இரைச்சல் மற்றும் கொந்தளிப்புடன் கடல் அலைகள் காணப்படுகிறது.


மாண்டஸ் புயல் காரணமாக கடல் சீற்றம் அதிகமாக காணப்படுவதால், சென்னையில் உள்ள கடலோர பகுதிகளுக்கு பொதுமக்கள் வரவேண்டாம் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.






மழை எச்சரிக்கை:


08.12.2022: தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.  கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


09.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது


10.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். 
கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.