EPS: சமரசத்துக்கு கூப்பிட்ட இபிஎஸ்... இறங்கி வருவார்களா சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி?
எடப்பாடி பழனிசாமி சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததை சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி தரப்பினர் ஏற்றுக்கொள்வார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ்நாட்டின் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தாலும், எதிர்க்கட்சியாக திமுக அமைந்தாலும் தமிழக அரசியலில் தற்போது புயலைக் கிளப்பிக் கொண்டிருப்பது அதிமுக-வே ஆகும்.
நெருக்கடியில் சிக்கிய இபிஎஸ்:
எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு சவால் விடும் வகையில் இந்த தேர்தலை அதிமுக எதிர்கொண்ட நிலையில், வெறும் 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றனர். திமுக-வுடன் இணைந்து ஆட்சியமைக்க முயன்றார், தவெக ஆட்சியமைக்க ஒத்துழைக்கவில்லை என்று பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி எடப்பாடி பழனிசாமி மீது அடுக்கினர்.
தொடர் தோல்வி, கட்சியின் மூத்த தலைவர்களே தனக்கு எதிராக திரும்பியிருப்பது அதிமுக-வின் கொறடா மற்றும் சட்டமன்ற தலைவர் பதவியைக் கைப்பற்ற நடக்கும் போட்டியால் எடப்பாடி பழனிசாமி கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார். பொதுக்குழுவைக் கூட்டி பொதுச்செயலாளர் பதவியையும் பறிக்க அதிருப்தி எம்எல்ஏ-க்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
சமாதானப் பேச்சுவார்த்தைக்கு செல்வார்களா?
இந்த சூழலில், எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிவிப்பில் கட்சி என்றால் பிரச்சினை இருக்கத்தான் செய்யும். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என்று வெளிப்படையாக அதிருப்தியாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகே பலவீனமாக காணப்படும் அதிமுக இன்னும் பிளவுபட்டால் அதிமுக எதிர்காலம் கேள்விக்குறியாகவே காணப்படும்.
எடப்பாடி பழனிசாமியின் அழைப்பை சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி ஏற்பார்களா? எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலே ஒன்றாக செயல்படுவார்களா? அதிமுக சட்டமன்ற தலைவராக எடப்பாடி பழனிசாமி தொடர்வாரா? எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் தரப்பினரின் கோரிக்கையான சசிகலா, தினகரனை கட்சியில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி ஏற்பாரா? அல்லது எடப்பாடி பழனிசாமிக்காக சசிகலா, தினகரனுக்கு எதிரான நிலைப்பாட்டிலே சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி தரப்பினர் தொடர்வார்களா? என்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.
அடுத்து என்ன நடக்கும்?
தவெக ஆட்சிக்கு அதிமுக தரப்பின் 36 எம்எல்ஏ-க்கள் ஆதரவுக்கரம் நீட்டியுள்ள நிலையில், அதிமுக-வின் அந்த ஆதரவைத் தொடர எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவிப்பாரா? என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. இதனால், அடுத்தடுத்த நாட்களில் அதிமுக-வில் இன்னும் பல்வேறு காரசாரமான சம்பவங்கள் அரங்கேறலாம் என்பது மட்டும் உறுதியாகும்.
அதிமுக-வில் நடக்கும் பிரச்சினைகளை சுமூகமாக முடித்து அடுத்து வரும் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், அதற்கான பணிகளில் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று அதிமுக-வின் தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்





















