கடலூர் அருகே 4 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கத் திட்டம்; அரசு அனுமதிக்கவே கூடாது- எழும் கோரிக்கை!
கடலூர் கடலில் ஹைட்ரோகார்பன்: சுற்றுச்சூழல், மீனவர் வாழ்வாதாரம் பாதிக்கும் - அன்புமணி எச்சரிக்கை!

கடலூர் பரங்கிப்பேட்டை கடல் பகுதியில் 4 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க ஹிந்துஸ்தான் ஆயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் சூழலை சீர்குலைக்கும் திட்டத்தை அரசு அனுமதிக்கக் கூடாது எனவும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
’’கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் 4 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஹிந்துஸ்தான் எண்ணெய் கண்டுபிடிப்பு நிறுவனம் (Hindustan Oil Exploration Company - HOEC) முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
ஒட்டுமொத்த கடலூர் மாவட்டத்தையும் சுரங்க நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக கடலூர் மாவட்ட தாது அறக்கட்டளை ஏற்கனவே அறிவித்திருக்கும் நிலையில், அம்மாவட்டத்தின் சுற்றுச்சூழலை மேலும் சீரழிக்கும் நோக்குடன் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திணிக்க முயல்வது கண்டிக்கத்தக்கது.
ஹிந்துஸ்தான் எண்ணெய் நிறுவனம் விண்ணப்பம்
ஹிந்துஸ்தான் எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமாக ஏற்கனவே இருக்கும் எண்ணெய்க் கிணறுகளில் எண்ணெய் வளம் வேகமாக குறைந்து வரும் நிலையில், புதிய ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க அந்த நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. இந்த 4 ஹைட்ரோ கார்பன் கிணறுகளும் பரங்கிப்பேட்டையில் இருந்து 18 கி.மீ தொலைவில் வங்கக்கடலில் அமைக்கப்படவுள்ளன. இந்தப் பகுதிகள் தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் (Tamil Nadu Coastal Zone Management Authority.) கட்டுப்பாட்டுக்குள் வருவதால் அதன் அனுமதி கேட்டு ஹிந்துஸ்தான் எண்ணெய் நிறுவனம் விண்ணப்பித்திருக்கிறது.
வங்கக் கடலில் இந்த ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கப்பட்டால் மீன்வளம் மிகக்கடுமையாக பாதிக்கப்படும்; அப்பகுதியில் அதிக அளவில் உள்ள மாங்குரோவ் காடுகளும் கடுமையாக பாதிக்கப்படும். இதனால் மதிப்பிட முடியாத அளவுக்கு சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பது மட்டுமின்றி, மீனவர்களின் வாழ்வாதாரமும் மிகக்கடுமையாக பாதிக்கப்படும்.
மன்னிக்கவே முடியாது
ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் வேளாண்மையும், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படக்கூடாது என்பதால்தான் கடலூர் மாவட்டத்தின் பல பகுதிகள் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களை காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி சாதித்தது. அதனால் இந்தப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த முடியாது என்பதை உணர்ந்து கொண்டு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல எல்லையிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த ஹிந்துஸ்தான் எண்ணெய் நிறுவனம் முயல்வதை மன்னிக்கவே முடியாது.
தமிழ்நாட்டை ஒட்டிய கடலோரப் பகுதிகளிலும், கடல் பகுதிகளிலும், வேளாண் நிலங்களிலும் ஏராளமான ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு உரிமம் வழங்கியும் கூட பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகளின் எதிர்ப்பால் அத்திட்டங்களுக்கு மாநில அரசு அனுமதி அளிக்கவில்லை. அதே நிலை தான் இனியும் தொடர வேண்டும். சுற்றுச்சூழலையும், கடல் வளத்தையும், மீனவர்களின் வாழ்வாதாரங்களையும் அழிக்கும் எந்தத் திட்டங்களையும் தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது.
கடலூர் மாவட்டத்தையே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக..
தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் தமிழ்நாடு அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமைச் செயலாளரை தலைவராகக் கொண்டுதான் செயல்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தையொட்டிய வங்கக்கடலில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்கும் ஹிந்துஸ்தான் எண்ணெய் நிறுவனத்திற்கு இந்த ஆணையமும், தமிழக அரசும் அனுமதி அளிக்கக் கூடாது. அதுமட்டுமின்றி, ஒட்டுமொத்த கடலூர் மாவட்டத்தையும் காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சேர்க்க வேண்டும்’’.
இவ்வாறு அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
Before You Go
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
ட்ரெண்டிங் செய்திகள்























