கூகுள் பே மூலம் லஞ்சம் வாங்கிய தலைமை காவலரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.
 


கடலூர் ஆல்பேட்டை சோதனைச்சாவடியில் புதுவை மாநிலத்திலிருந்து மது பாட்டில்கள் கடத்தி வரப்படுகிறதா என மதுவிலக்கு போலீசார் சோதனை செய்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த 3ஆம் தேதி இரண்டு காரில் ஹைதராபாத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் சுற்றுலா வந்துள்ளார்கள். இந்த மாணவர்கள் பாண்டிச்சேரி சுற்றுலாவை முடித்துவிட்டு பிச்சாவரத்திற்கு சுற்றுலா செல்லும் வழியில் ஆல்பேட்டை சோதனை சாவடியில் மதுவிலக்கு போலீசார் சோதனை செய்தபோது அவர்கள் காரில் புதுச்சேரி மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் இது போன்ற மதுபாட்டில்கள் வாங்கி வரக்கூடாது என தங்களுக்கு தெரியாது என தெரிவித்த நிலையில் மாணவர்களாக இருப்பதால் மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். அவர்கள் பிச்சாவரம் சென்றுவிட்ட நிலையில் கடலூர் மதுவிலக்கு பிரிவு தலைமை காவலர் சக்திவேல் என்பவர் அந்த மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் மீது வழக்கு பதிவு செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதால் நீங்கள் திரும்பச் செல்லும் போது கடலூர் வர வேண்டும் என கூறியுள்ளார்.

 

அதனை தொடர்ந்து அவர்கள் கடலூர் வந்த நிலையில் அவர்களிடம் சக்திவேல் பேசி உங்கள் மீது வழக்கு பதிவு செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளார்கள். மாணவர்களாகிய உங்களது எதிர்காலம் பாதிக்கப்படும் நான் அதிகாரிகளை சமாளித்துக் கொள்கிறேன் எனக்கு பணம் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார். இதனை அடுத்து மாணவர்கள் தங்களிடமிருந்து 3 ஆயிரம் ரூபாய் பணத்தினை கொடுத்துள்ளனர். கூடுதலாக சக்திவேல் பணம் கேட்ட நிலையில் பணம் தங்களிடம் இல்லை எனவும் கூகுள் பே மூலம் பணத்தை அனுப்ப சக்திவேல் கேட்டுக் கொண்டதின் பேரில் கூகுள் பேவிற்கு 10,000 ரூபாய் பணம் அனுப்பி உள்ளனர். இதனை தொடர்ந்து மாணவர்கள் கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு ஆன்லைன் மூலம் ஒரு புகார் மனுவை அனுப்பி உள்ளனர். அதில் தாங்கள் தெரியாமல் புதுவை மாநில மதுபாட்டில் எடுத்து வந்ததாகவும் அதனை மன்னித்து அதிகாரிகள் அனுப்பிய நிலையில் இது போன்ற ஒரு காவலர் திடீரென தங்களை வரவழைத்து தங்களை மிரட்டி பணத்தை பெற்றுக் கொண்டதாகவும் மேலும் பணம் பெற்றுக் கொண்டதற்கான ஆதாரங்களையும் கூகுள் பே மூலம் பணமதிப்பு அனுப்பிய தகவல்களையும் காவல்துறை கண்காணிப்பாளருக்கு அனுப்பினர். அதனைத் தொடர்ந்து அந்த புகார் மீது விசாரணை நடத்திய கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராமன் சக்திவேலை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.