CM Vijay: ’’ஜோதிடர் நியமனத்தில் மறுபரிசீலனை; குதிரை பேரத்தில் அல்ல குதிரை வேகத்தில் செயல்படுவோம்’’- சிஎம் விஜய் அதிரடி
CM Vijay Speech Tamil Nadu Assembly: எம்எல்ஏ பிரேமலதா பேசிய கருத்துகள் குறித்து மீண்டும் சிந்தித்து பரிசீலனை செய்து செயல்படுவோம்- முதலமைச்சர் விஜய்.

இந்த அரசு குதிரை வேகத்தில் செயல்படும் அரசே தவிர, குதிரை பேரத்தில் ஈடுபடும் அரசு அல்ல என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் பேசி உள்ளார்.
சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று (மே 13) நடைபெற்று வருகிறது. இதற்காக முன்மொழியப்பட்ட தீர்மானத்துக்கு வரவேற்பு தெரிவித்த மற்றும் எதிர்ப்புத் தெரிவித்த பல்வேறு கட்சிகளின் சட்டமன்றக் குழு தலைவர்களுக்கு முதல்வர் விஜய் நன்றி தெரிவித்தார்.
அப்போது முதல்வர் விஜய் பேசியதாவது:
’’இந்த அரசு நிச்சயம் மதச்சார்பற்ற அரசாகத்தான் செயல்படும். முந்தைய அரசுகளால் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் நிச்சயம் தொடரும். எதிர்க் கட்சிகளை எதிரிக் கட்சிகளாக நினைக்காமல் செயல்படுவோம்.
எம்எல்ஏ பிரேமலதா பேசிய கருத்துகள் குறித்து மீண்டும் சிந்தித்து பரிசீலனை செய்து செயல்படுவோம். இந்த அரசு குதிரை வேகத்தில் செயல்படும் அரசே தவிர, குதிரை பேரத்தில் ஈடுபடும் அரசு அல்ல என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறேன்’’.
இவ்வாறு முதல்வர் விஜய் தெரிவித்தார்.
பிரேமலதா பேசியது என்ன?
முன்னதாக நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பின் மீதான விவாதத்தில் பேசிய தேமுதிக சட்டமன்றக் குழுத் தலைவர் பிரேமலதா, ‘’அரச குடும்பத்தில் இருந்து வந்தவன் இல்லையென என்று முதலமைச்சர் விஜய் சொன்னபோது அனைவரும் வரவேற்றனர். ஆனால் இன்று அவருடைய ராஜகுருவாக உள்ள ரத்தன் பண்டிட் வெற்றிவேலை, அரசு சிறப்பு அதிகாரியாக அரசு வேலையாக நியமித்ததை வண்மையாக கண்டிக்கிறேன். ராஜ குருவாக இருந்தால் தனிப்பட்ட முறையில் வைத்து கொள்ளுங்கள். அரசு உயர் பதவியில் கொண்டு வந்தது சரியில்லை’’ என்று கூறி இருந்தார்.
இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக ஜோதிடர் நியமன விவகாரத்தில் மறு பரிசீலனை செய்யப்படும் என்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
Before You Go
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
ட்ரெண்டிங் செய்திகள்






















