CM Vijay Delhi Visit: முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் தோல்வியா? அடுத்தடுத்து ரத்தான சந்திப்புகள்!
டெல்லியில் முதலமைச்சர் விஜய்யின் பயணத்தின்போது திட்டமிடப்பட்ட பல சந்திப்புகளும், நிகழ்வுகளும் ரத்தாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முதலமைச்சர் விஜய் அரசு முறை சந்திப்பாக டெல்லிக்குச் நேற்று சென்றார். முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு டெல்லிக்கு முதன்முறையாக சென்ற விஜய் பிரதமர் மோடியைச் சந்தித்தார். மத்திய உள்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் நேரில் சந்தித்தார்.
அமித்ஷா சந்திப்பு ரத்து:
தமிழக முதலமைச்சர் விஜய்யின் இந்த பயணத்தில் அவரது முக்கியமான நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடியைச் சந்தித்த பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதாகவே திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அவர் அமித்ஷாவுடனான சந்திப்பு ரத்தாகியது.
அமித்ஷா முதலமைச்சர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியது. அதேசமயம், விஜய் தரப்பில் அமித்ஷாவை சந்திப்பதற்கு நேரமும் ஒதுக்கவில்லை, ரத்து செய்யவும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
அடுத்தடுத்து நிகழ்வுகள் ரத்து:
இதுமட்டுமின்றி இன்று டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை இன்று திறந்து வைப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அவர் சிலையை திறந்து வைக்காமல் இன்று சென்னை திரும்புகிறார்.
இதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மை இல்லாமல் இருந்த தவெக-விற்கு காங்கிரஸ் கூட்டணி அமைத்து பக்கபலமாக இருந்தது. இதனால், டெல்லி சென்ற முதலமைச்சர் விஜய் டெல்லியில் ராகுல் காந்தி, சோனியாகாந்தியை சந்திப்பார் என்று கருதப்பட்டது. ஆனால், சோனியா மற்றும் ராகுல்காந்தியையும் அவர் சந்திக்கவில்லை. இதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
கேரள முதலமைச்சரை சந்தித்த அமித்ஷா:
அமித்ஷாவை சந்திப்பதற்கு விஜய் தரப்பில் நேரம் கேட்கப்பட்டிருந்தது. ஆனால், அலுவலக பணிகள் இருப்பதாக காரணம் கூறி அமித்ஷாவை சந்திப்பதற்கு விஜய்க்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. ஆனால், அமித்ஷா கேரளாவின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விடி சதீஷனை இன்று நேரில் சந்தித்தார்.
10 நிமிடம் போதுமா?
இதுமட்டுமின்றி, பொதுவாக பிரதமரைச் சந்திக்கும் தமிழக முதலமைச்சர்கள் தமிழ்நாட்டின் கோரிக்கைகளை விலாவரியாக விவரித்து கூறுவதால் சுமார் 30 நிமிடங்கள் முதல் சுமார் 1 மணி நேரம் வரை சந்திப்பு நிகழும். ஆனால், மேகதாது அணை விவகாரம், தமிழ்த்தாய் வாழ்த்து, தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு நிறுவனங்களை அமைப்பதில் முக்கியத்துவம் அளிப்பது குறித்து பல பக்கங்களை கொண்ட கோரிக்கை மனுவை அளித்தார்.
கோரிக்கை மனு குறித்து விலாவரியாக பிரதமரிடம் எடுத்துக்கூறுவதற்கு இந்த 10 நிமிடங்கள் போதுமா? என்ற கேள்வியும் பல தரப்பில் இருந்து முன்வைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, பொதுவாக டெல்லி செல்லும் தமிழக முதலமைச்சர்கள் தமிழ்நாடு அரசின் இல்லத்தில் பத்திரிகையாளர்களை நேரில் சந்திப்பது வழக்கம். ஆனால், அவர் பத்திரிகையாளர்களை சந்திப்பதையும் தவிர்த்தார்.
டெல்லி பயணம் தோல்வியா?
இதனால், முதலமைச்சர் விஜய்யின் இந்த டெல்லி பயணம் தோல்வி அடைந்ததாகவே கூறப்படுகிறது. தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டு அதிமுக எம்எல்ஏ-க்களை தன்வசம் இழுத்து வருகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், அவரது டெல்லி பயணமும் தோல்வி அடைந்துள்ளதாக எழுந்துள்ள விமர்சனத்தை தவெக எப்படி எதிர்கொள்ளப்போகிறது? என்ற கேள்வி எழுந்துள்ளது.
Before You Go
Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
ட்ரெண்டிங் செய்திகள்





















