முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இரண்டு நாட்கள் சுற்றுப் பயணமாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு சென்றுள்ளார். அங்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்த அவர், அதற்கான அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய போது, மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார். அவர் பேசியது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.
நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர்
காரைக்குடி சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், செட்டிநாடு பகுதியல் 61 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வேளாண் கல்லூரி கட்டிடத்தை திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து, திருச்சி பைபாஸ் சாலையில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சட்டக் கல்லூரி கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து, அங்கு நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற முதலமைச்சர், 13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற உள்ள 28 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, 2 ஆயிரத்து 559 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவுற்ற 49 திட்டப் பணிகளை அவர் திறந்து வைத்தார். மேலும், அரசு சார்பில் 15 ஆயிரத்து 453 பயனாளிகளுக்கு 205 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதோடு, சட்டக் கல்லூரி அருகே 32 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மினி டைடல் பார்க் கட்டிடத்தையும் அவர் திறந்து வைத்தார்.
மத்திய அரசை விளாசிய முதலமைச்சர்
இதைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சிவகங்கை என்றாலே சிலிர்ப்பு என்றும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நாகரீகம் ஓங்கி இருந்ததற்கான கீழடி தடயம் கிடைத்த மண் இந்த(சிவகங்கை) மண் என்றும் தெரிவித்தார்.
பலரின் வீரத்தாலும், தியாகத்தாலும் சிவந்த மண் என்றும், ஆங்கிலேயர்களை எதிர்த்து நின்ற வேலுநாச்சியார் வாழ்ந்த மண் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ்நாடு வளர்ந்துள்ளதாக மத்திய அரசு புள்ளிவிவரங்கள் சொல்வதோடு, வேலை வாய்ப்பில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளதாகவும் பாராட்டியுள்ளதாக சுட்டிக்காட்டினார். ஆனால், தேர்தலுக்காக பல ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பிரதமர் கூறுவதாகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்த மத்திய அரசின் தரவுகளை, பிரதமரும் ஆளுநரும் படிக்க வேண்டும் என குறிப்பிட்டார்.
மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும் என தெரிவித்த முலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய பாஜக அரசிற்கு மகாத்மா காந்தியும் பிடிக்காது, மக்கள் நன்றாக இருந்தாலும் பிடிக்காது என சாடினார்.
கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்த மகாத்மா காந்தி பெயரிலான 100 நாள் வேலை திட்டத்தை காலி செய்துவிட்டு, வேறு பெயரில் புதிய திட்டம் கொண்டு வந்திருப்பதாகவும் அவர் விமர்சித்தார். மேலும், தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சிதான் என்று உறுதிபடக் கூறிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மக்கள் மகிழ்ச்சியே தன்னுடை மகிழ்ச்சி என்றும், தமிழகத்தின் வளர்ச்சியே தனது மகிழ்ச்சி என்றும் கூறினார்.
